Followers

Copyright

QRCode

Sunday, October 17, 2010

அழகிய தீயே -- அனுபவித்தே தீர வேண்டிய படம்

ஒரு இயக்குனரின் வெற்றி எவ்வளவு பிரமாணடமாக தன் கற்பனையை ரசிகனுக்கு திரையில் வெளிபடுத்துகிறார் என்பதில் இல்லை , எவ்வளவு சரியாக தான் சொல்ல வந்த விஷயத்தை... தான் உருவாக்க நினைத்த உணர்ச்சிகளை... ரசிகனின் மனதில் பதிய வைக்கிறார் என்பதில்தான் இருக்கிறது... எந்த ஒரு திரைப்படத்திற்கும் லாஜிக் பார்ப்பது என்னை பொருத்தவரைக்கும் தேவை இல்லாத ஒன்று ... திரைப்படம் என்பது ஏதோ ஒரு இயக்குனரின் கற்பனைதான்.... நம் கனவுகளை போல.... நாம் தினந்தோறும் பல கனவுகளை கடந்துதான் வருகிறோம் , ஆனால் ஒரு சில கனவுகள் மட்டுமே ரசனையாக நம்மை சந்தோசபடுத்தும் விதமாக அமையும் ... அந்த கனவுகளின் நீட்சியாக அன்று முழுவதும் நம் மனதில் ஒரு இனம் புரியா சந்தோசம் இருந்துகொண்டே இருக்கும் .. அப்படிப்பட்ட ஒரு கனவுதான் இந்த அழகிய தீயே திரைப்படமும் ...
சினிமாவில் ஜெய்க்க வேண்டும் என்று ஒரு லச்சியத்துடன் வாழும் ஒரு இளைஞன் , பணக்கார குடும்பத்தில் பிறந்து அங்கு இருக்கும் மனிதர்களை பிடிக்காமல் தன சொந்த காலில் நிற்க ஆசைப்படும் ஒரு பெண் , இந்த இருவருக்கும் இடையே எப்படி காதல் முளைக்கிறது என்பதே இந்த படம் ... இந்த படம் என்னை ரசிக்க வைத்ததிற்கு மிக முக்கிய காரணம் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் உருவாக்கமும் அதை கொஞ்சம் கூட தடுமாறாமல் திரையில் அப்படியே கொண்டுவந்த விதமும்தான்...   படம் முழுவதும் இந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் கதையில் வராத ஒரு பெண்ணிடம் கதை கூறுவதை போலதான் (flash back) திரைகதை இருக்கும் ... 

கதையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை படத்தை பார்க்கும் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு நம்மை அந்த மனநிலைக்கு தயார்படுத்துவதற்கு இந்த திரைகதை அமைப்பு உதவியிருக்கிறது... உதாரணமாக இனிமேல்தான் இருவரும் முதன்முறையாக சந்திக்க போகிறார்கள் , இனிமேல்தான் கதையில் ஏதோ ஒரு முக்கியமான திருப்பம் நடக்கபோகிறது , எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்கும் நடுவே இனிமேல்தான் ஒரு புரிதல் ஆரம்பம் ஆக போகிறது என்று ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குனர் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவார் அந்த கதை சொல்லும் கதாபாத்திரத்தின் மூலம் ... சுற்றுலா செல்லும்போது அடுத்து நாம் இந்த இடத்திற்கு செல்ல போகிறோம் என்று கைடு சொல்லியதும் நமக்குள் அந்த இடத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு உருவாவதை போல நமக்கும் இந்த யுக்தி கதையின் மேல் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது... கடைசி வரை அந்த எதிர்பார்ப்பை  ஏமாற்றாமல் நிறைவேற்றி இருப்பதில்தான் இயக்குனர் ஜெய்த்திருப்பார்...


படத்தின் டைட்டில் கார்டில் சில கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டுவார்கள் அதில் ஒன்றில்  ஒரு பால் பூத்தில் மனிதர்களோடு கன்றுகுட்டி ஒன்றும் வரிசையில் நின்று கொண்டு இருக்கும், இப்படி அந்த டைட்டில் கார்டிலேயே இயக்குனர்  அடுத்த இரண்டு மணிநேரம் நாம் எப்படிப்பட்ட ஒரு படத்தினை பார்க்க போகிறோம்  என்று நம் மனதை டியூன்   செய்து விடுகிறார்... படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதே அலைவரிசையில் இருப்பதால் நம்மால் எளிதில் அதை உள்வாங்கி கொள்ள முடிகிறது .... படத்தில் மூன்று முக்கிய கதாபத்திரங்களில் பிரசன்னா , பிரகாஷ்ராஜ் மற்றும் நவ்யா நாயர் நடித்திருப்பார்கள் ... இதில் பிரகாஷ் ராஜ் கொஞ்சநேரமே வருவார் ... ஆனால் அவர் கதாபத்திர உருவாக்கத்தில் இயக்குனரின் திறமை பளிச்சிடும் ... ஆரம்பத்தில் ஒரு கேனை கிறுக்கனாக நமக்கு தெரியும் அந்த கதாபத்திரத்தின் மேல் போக போக நமக்கு ஒரு மரியாதை உருவாகி விடும் ... அந்த மரியாதையும் ஏதோ ஒன்றிரண்டு காட்சிகளில் அவரை நல்லவர் போல காட்டி  உருவாக்காமல்,, வலிந்து திணிக்கபடாமல்,,  கதையின் ஓட்டத்திலேயே நமக்கு இயல்பாக உருவாகி விடும்...இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கி இருப்பார் இயக்குனர் ...

இந்த படத்தில் இயக்குனர் ராதாமோகனுக்கு பெரிய துணையாக இருந்தவர் வசனம் எழுதிய விஜி அவர்கள் ... வசனம் எழுதுகிறேன் என்று தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டாமல் , படம் பார்க்கும் நாம் என்ன நினைக்கிறோமோ  அது அப்படியே வசனமாக வரும் வகையில்,,  என்ன தேவையோ அதை மட்டுமே எழுதி இருப்பார் ... உதாரணமாக பிரகாஷ் வரும் இரண்டு மூன்று காட்சிகளிலேயே முன்ன பின்ன தெரியாதவனுக்கு இவ்வளவு உதவி செய்கிறானே இவ்வளவு நல்லவனா இவன் என்று நமக்கு தோன்றும்....   அந்த வசனம் அடுத்த காட்சியில் வந்து விடும்... அதே சமயம் "ஒருத்தனோட கனவை குறை சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது" , "நம்மை சுத்தி நாலு நல்லவங்க இருந்தா போதும் அதை விட பெரிய ஆசிர்வாதம் எதுவும் கிடையாது" ,"கறந்த பால், அதிகாலை பனித்துளி , குழந்தையின் சிரிப்பை போல காதலும் புனிதமானது"   என்பதை போன்ற ரசிக்க வைக்கிற வசனங்களும் படம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் ... அதே போல நகைசுவை காட்சிகளில் இவரின் வசனம் புகுந்து விளையாடி இருக்கும் ... குறிப்பாக நாய்க்குட்டி வாங்க அந்த மாதிரியான வீட்டுக்குள் பிரசன்னாவும் அவர் நண்பரும் நுழையும் காட்சியில் குட்டி சம்பந்தமாக கொஞ்சம் இரட்டை அர்த்தம் வரும் மாதிரியான வசன  அமைப்புகள் இருந்தாலும் அந்த காட்சியின் இறுதியில் நாம் இவ்வளவு நேரம் பேசிய குட்டி நாய் குட்டி பற்றி இல்லை என்று தெரிந்தவுடன் அந்த நண்பர் "தேவை இல்லாம எங்க அப்பனை வேற அசிங்கபடுத்திடேனே" என்று புலம்பும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது... அதே போல பாஸ்கர் வரும் காட்சிகளில் சில சினிமாக்களை நாசூக்காக காலை வாரி இருப்பார் ...அடித்து சொல்லலாம் இந்த படத்தின் வெற்றிக்கு விஜிக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்று...

இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் இசை அமைப்பாளர் வித்யாசாகர் ... கண்டிப்பாக இப்படி ரொம்ப எளிமையான இரைச்சல் இல்லாத  ஆனால் ரசிக்க வைக்ககூடிய  பாடல்களை இவரை தவிர வேறு யாராலும் தர முடியாது ... "விழிகளின் அருகிலே வானம்" பாடல் படம் வந்த பொழுது பெரிய ஹிட் .. இப்பொழுதும் கேட்கும் பொழுது அதே பிரெஷ்நெஸ் அப்படியே... பின்னணி இசையிலும் ஆர்பாட்டம் இல்லாத அதே எளிமை .. குறிப்பாக  ஊட்டியில் பனிமூட்டம்  விலகி வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் அதே போல் கிளைமாக்சில் கொசுமருந்து புகை விலகி அதே வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் ஒரே இசையை இரு வேறு பீட்டில் கொடுத்து அந்த காட்சிக்கே புது பரிமாணத்தை உருவாக்கி இருப்பார்... அவர் இப்பொழுது மார்கெட்டில் இல்லாததற்கு  அவர் காரணம் இல்லை அவரை சரியாக பயன்படுத்த யாரும் இங்கே இல்லை என்பதே காரணம் என்பது இந்த படத்தை பார்த்தால் புரியும் ...     

படம் முழுவதும் ஒரு கவிதை தொகுப்பை போல கோர்வையாக கொண்டு போய் இருப்பார் இயக்குனர் ... சைக்கிள் டியுப் பஞ்சர் ஓட்ட போகும் ஹீரோவுக்கு நவ்யா நாயருடன் திருமணம் நடப்பது, இருவரும் முதன் முதலில் எங்கே சந்தித்தோம் என்பதை பிரசன்னா கற்பனையாக  பிரகாஷ் ராஜிடம் கூறும் இடம் , நவ்யாவின் செருப்பு வீட்டிற்கு வெளியே எந்த பொசிசனில் இருக்கிறது என்பதை கொண்டு பிரசன்னா அவரின் மூடை(mood) கணிப்பது,,, அந்த "ப்பூம்" ஸீன், அதன்  நீட்சியாய் கிளைமாக்சில் நவ்யாவிற்கு ஒரே நொடியில் அதுவரை அவருக்கே தெரியாமல் அவர் மனதில் பிரசன்னாவின் மேல் இருந்த காதல் வெளிவரும் ஸீன் என்று கவிதைநயமான காட்சிகள் ஏராளம் ...  

படத்தில் குறையே இல்லையா என்றால் இருக்கிறது ... படத்தின் இரண்டாம் பாதியில் சினிமாத்தனமான காட்சிகள் ஏராளம் .. குறிப்பாய் விபத்தில் அடிபட்டு சாகும் தருவாயில் இருக்கும் ஹீரோவின் நண்பன் இறக்கும் தருவாயில் நவ்யாவிடம் பிரசன்னாவின் காதலை சொல்ல முயற்சி செய்வது (ஆனால் கிளைமாக்சில் நவ்யா அவன் சாகும் தருவாயில் அவனின் கடைசி நிமிடங்களில் கூட இருந்த அனுபவத்தை பதைபதைப்புடன்   சொல்லும் பொழுது நம் நெஞ்சம் கணக்கும் விதத்தில் அவரின் நடிப்பு இருக்கும்) , அதே காட்சியில் பாஸ்கர் எவ்வளவு செலவானாலும் பரவாய் இல்லைடா நீங்க எல்லாம் என் புள்ளைக மாதிரி அவன் பொளைக்கனும்டா என்று பீலிங்க்ஸ் விடுவது  (அவர் அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு) , பிரசன்னாவின் அம்மா வரும் காட்சி என்று அக்மார்க் தமிழ் சினிமா செண்டிமெண்ட் காட்சிகள் இரண்டாம் பாதியில் அதிகம் ... 

இது ரொம்ப எளிதான ஒரு படம் ஆனால் கோடி கோடியாக பணத்தை கொட்டி எடுத்தாலும் கொடுக்க முடியாத பல மெல்லிய உணர்வுகளை படம் முழுவதும் நமக்கு தந்துகொண்டே இருக்கும் ... கண்டிப்பாக ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய படம் இது ... இதுவரை பார்க்காதவர்கள் நம்பி ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்...  

(ரொம்ப  நாளாக இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ... நேற்று மீண்டும் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அமைந்தது ... எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும்   எனக்கு பிரெஷாகவே படம் தெரிந்தது (my sassy girl போலவே) ... அதனால் அடக்க முடியாமல் இந்த படத்தை பற்றி இன்று எழுதி விட்டேன்...  )          

14 comments:

எஸ்.கே said...

எனக்கு பிடித்த நான் மிகவும் ரசித்த படங்களில் ஒன்று! நல்ல அலசல்! வாழ்த்துக்கள்!

வினோ said...

இரெண்டாம் முறையா இல்லை மூன்றாம் முறையா என்று தெரியவில்லை... இன்றும் பார்த்தேன்... மிக்க நன்றி...

Yoganathan.N said...

இதுவரை பார்த்ததில்லை. படம் நல்லா இருக்கும் போலிருக்கே.

//இதுவரை பார்க்காதவர்கள் நம்பி ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்...//
Recommendation பலமா இருக்கு. கூடிய விரைவில் பார்த்து விடுகிறேன். :)

ILLUMINATI said...

//ஒரு இயக்குனரின் வெற்றி எவ்வளவு பிரமாணடமாக தன் கற்பனையை ரசிகனுக்கு திரையில் வெளிபடுத்துகிறார் என்பதில் இல்லை , எவ்வளவு சரியாக தான் சொல்ல வந்த விஷயத்தை... தான் உருவாக்க நினைத்த உணர்ச்சிகளை... ரசிகனின் மனதில் பதிய வைக்கிறார் என்பதில்தான் இருக்கிறது...//

ஹையோ! :)
ராஜாவுக்கு என்னவோ ஆயிடுச்சு! இப்படியே இருந்தா நல்லா இருக்கும்.
seriously,மிக நல்ல விமர்சனம் நண்பா!உங்களுக்கு பிடித்த தமிழ் படங்களைப் பற்றி நீங்கள் அதிகம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அப்புறம்,தோணினத எழுத தான் நாம ப்ளாக் வச்சு இருக்கோம்.எப்ப தோணுதோ அப்ப எதைப் பத்தியும் எழுதுங்க. :)

இதே படம், happy என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்தது.இந்தப் படத்தின் அளவிற்கு அருமை கிடையாது என்றாலும்(பின்ன? வாய்ப்பே இல்ல..), you tube இல் ட்ரை பண்ணிப் பார்க்கலாம். :)

"ராஜா" said...

// எனக்கு பிடித்த நான் மிகவும் ரசித்த படங்களில் ஒன்று! நல்ல அலசல்! வாழ்த்துக்கள்!

எனக்கு தெரிந்து அனைவராலும் ரசிக்கபட்ட படம் இது என்று நினைக்கிறேன் .. நன்றி நண்பரே

"ராஜா" said...

//இதுவரை பார்த்ததில்லை. படம் நல்லா இருக்கும் போலிருக்கே
Recommendation பலமா இருக்கு. கூடிய விரைவில் பார்த்து விடுகிறேன். :

தல பாருங்க படம் நல்லா இருக்கும் ...

மாங்காத்தாவில் யுவனும் ராஜாவும் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்களாமே.. அதை பற்றி பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...

"ராஜா" said...

//ஹையோ! :)
ராஜாவுக்கு என்னவோ ஆயிடுச்சு! இப்படியே இருந்தா நல்லா இருக்கும்.

:)

// seriously,மிக நல்ல விமர்சனம் நண்பா!உங்களுக்கு பிடித்த தமிழ் படங்களைப் பற்றி நீங்கள் அதிகம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


நண்பா நீங்க இப்படி பாராட்டபோதெல்லாம் எனக்கு பயமா இருக்கு அடுத்து ஏதாவது விமர்ச்சனம் எழுதி சொதப்பிரக்கூடாதுண்ணு ... கண்டிப்பா இதை போல் ஒரு படம் பார்க்கும் பொழுது எழுதுகிறேன் நண்பா...

//அப்புறம்,தோணினத எழுத தான் நாம ப்ளாக் வச்சு இருக்கோம்.எப்ப தோணுதோ அப்ப எதைப் பத்தியும் எழுதுங்க.

அந்த நம்பிக்கையிலதான் நானேல்லாம் பிளாக் எலுதிக்கிட்டு இருக்கேன்,,

//இதே படம், happy என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்தது.இந்தப் படத்தின் அளவிற்கு அருமை கிடையாது என்றாலும்(பின்ன? வாய்ப்பே இல்ல..), you tube இல் ட்ரை பண்ணிப் பார்க்கலாம். :)

நான் இதுவரை பார்த்ததில்லை .. நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன் நண்பா..

"ராஜா" said...

@ vino

// இரெண்டாம் முறையா இல்லை மூன்றாம் முறையா என்று தெரியவில்லை... இன்றும் பார்த்தேன்... மிக்க நன்றி..

எத்தனை முறை பார்த்தாலும் freshஆக இருப்பதே படத்தின் பெரிய பிளஸ் என்று நினைக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

sema செம படம்,சூப்பர் விமர்சனம்,வசனகர்த்தா பற்றிய வரிகளும் தூள்

"ராஜா" said...

// sema செம படம்,சூப்பர் விமர்சனம்,வசனகர்த்தா பற்றிய வரிகளும் தூள்

நன்றி நண்பரே... வசனகர்த்தாதான் படத்தின் முதுகெலும்பே

ILLUMINATI said...

//நண்பா நீங்க இப்படி பாராட்டபோதெல்லாம் எனக்கு பயமா இருக்கு அடுத்து ஏதாவது விமர்ச்சனம் எழுதி சொதப்பிரக்கூடாதுண்ணு ... கண்டிப்பா இதை போல் ஒரு படம் பார்க்கும் பொழுது எழுதுகிறேன் நண்பா...//

தல, என்ன இது காமெடி பண்ணிக்கிட்டு?
உங்களுக்கு அருமையா வர்ற ஒண்ணை பத்தி ஏன் கவலைப்படுறீங்க?உங்க மனசுல உள்ளத எழுதுங்க.எவனையும் மதிச்சு யோசிக்காதீங்க.என்னையும் சேர்த்து... :)
நம்ம கருத்த சொல்ல தான் ப்ளாக்.புகுந்து விளையாடுங்க.நல்ல படங்கள் பார்க்கும் போது, கண்டிப்பா பகிர்ந்துக்கங்க.

அப்புறம், ஹாப்பி படம் பொறுமையாவே பாருங்க.ஒண்ணும் அவசரமே இல்ல. :)

"ராஜா" said...

//தல, என்ன இது காமெடி பண்ணிக்கிட்டு?
உங்களுக்கு அருமையா வர்ற ஒண்ணை பத்தி ஏன் கவலைப்படுறீங்க?உங்க மனசுல உள்ளத எழுதுங்க.எவனையும் மதிச்சு யோசிக்காதீங்க.என்னையும் சேர்த்து... :)
நம்ம கருத்த சொல்ல தான் ப்ளாக்.புகுந்து விளையாடுங்க.நல்ல படங்கள் பார்க்கும் போது, கண்டிப்பா பகிர்ந்துக்கங்க.

கண்டிப்பா தல ... அதுக்குதான ப்ளாக் இருக்கு ...

சி.பி.செந்தில்குமார் said...

m m ம் ம் அடுத்த பதிவு போடுங்க

sathishsangkavi.blogspot.com said...

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...

http://sangkavi.blogspot.com/2010/12/26122010.html

LinkWithin

Related Posts with Thumbnails