Followers

Copyright

QRCode

Thursday, March 8, 2012

விமர்சன "புளி"கள்



நம் சமூகத்தில் தன்னை பற்றிய   விமர்சனம் என்பது அனைவருக்கும் அருவருப்பானதாகவே இருக்கிறது. யாராவது நம் சிகையலங்காரத்தை விமர்சித்தால்கூட கோபம் பொத்துக்கொண்டு வரும் காரணம் பாராட்டுகள் தரும் சந்தோசம்தான் நமக்கு எப்பொழுதும் முக்கியம் , விமர்சனங்கள் பெரும்பாலும் நமக்கு வலியே பரிசளிக்கின்றன. நண்பா நீ அருமையாக    கவிதை எழுதுகிறாய் , நன்றாக  விவாதம் செய்கிறாய் , உனக்கு சுவாரஷ்யமான பேச்சு நடை இருக்கிறது என்று பள்ளியிலோ , கல்லூரியிலோ பழகிய என் நண்பன் கொடுத்த பாராட்டே இன்று நான் வலைபூ தொடங்கி எழுதும் தைரியத்தை கொடுத்திருக்கிறது , நான் மட்டும் இல்லை எல்லாருமே யாரோ ஒருவனின் பாராட்டில்தான் நம்பிக்கை பிறந்து தைரியமாக இங்கே எழுத முன் வந்திருப்பார்கள் , ஆனால் அதே நேரம் உனக்கெல்லாம் சரியா பேசவே தெரியாது நீயெல்லாம் எழுதி என்ன சாதிக்க போற என்று யாரோ ஒரு அதிமேதாவி நண்பன் நம்மை விமர்சித்தால் நம்மையும் அறியாமல் நம் எழுத்தில் ஒரு தேக்கம் வரும் , அந்த நண்பன் மேல் அளவிடமுடியாத கோபம் வரும் , ஆனால் அந்த விமர்சனம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒன்று நாம் எழுதுவதை விட்டு விடுவோம் இல்லை நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்ள போராடுவோம். உண்மையான விமர்சனங்கள் விமர்சிக்கபடுபவர் தன குறையை புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள அவர்களை  ஊக்கபடுத்தும் விதமாகவே அமைய வேண்டுமே அன்றி விமர்சிப்பவரின் அதிமேதாவிதனத்தை காட்டுவதாக ஒருபோதும்   அமையக்கூடாது .


சரி விசயத்துக்கு வருவோம் , இங்கே மிக எளிதாக எல்லோராலும் விமர்சிக்கப்படும் ஒரு விஷயம் சினிமா, காரணம் காசு கொடுத்து பார்க்கும் யாரும் எந்த விசயத்தையும் விமர்சிக்கலாம், ஆனால் காசு கொடுத்து அவர்கள் எழுதுவதை படிக்கும் வாசகன் அவர்களின் எழுத்தை விமர்சித்தால் அவர்களால் ஏற்றுகொள்ள முடியாது , அவனை பைத்தியகாரன் என்று பட்டம் கட்ட ஒரு கூட்டமே துணைக்கு வரும் , சரி அவர்கள் எழுதும் விமர்சனமாவது சரியாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது , நான் எவ்வளவு பெரிய சினிமா விமர்சகன் தெரியுமா என்று இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்த்த நான்கு உலகபடங்கள் தந்த அனுபவத்தில் தனக்கு தானே உருவாக்கிக்கொண்ட ஒரு மமதையில் , தன்னுடைய அதிமேதாவிதனத்தை காட்டுவதற்காகவே பலர் சினிமா விமர்சனம் எழுதிகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் அந்த விமர்சன பதிவில் அவர்களின் விமர்சனங்களை ஏதாவது குறை சொல்லி எழுதினால் அதை ஏற்று   கொள்ள மனம் இல்லாமல் எழுதியவனுடன் சண்டைக்கு வருவார்கள் ... அடுத்தவனின் படைப்பை குறைகூற தெரிந்தவன் கண்டிப்பாக தன் படைப்பின்  மீதான  மீதான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான்   வேண்டும். இல்லையென்றால்  தன் மனைவியை யாராவது ஓரகண்ணால் பார்த்தாலே தப்பு  என்று சொல்லிவிட்டு  அடுத்தவனின் மனைவியை பார்வையாலே கற்பழிக்கும்  மனிதர்களுக்கும்   உங்களுக்கும் வித்தியாசம் இல்லை 


அதே போல இன்னொரு குரூப்  இருக்கிறார்கள் , அவர்கள் வேலையே எந்த படம் வெளிவந்தாலும் வேலைவெட்டி இல்லாமல் அந்த படத்தை பார்த்து விட்டு   விமர்சனம் எழுதுவதுதான். அது தவறில்லை ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அந்த படத்தின் மொத்த கதையையும் எழுதிவிடுவார்கள் , சமீபத்தில் அரவான் படத்திற்கும் அப்படி ஒரு பதிவர் விமர்சனம் எழுதியிருந்தார் , படத்தின் மீது இருந்த ஈர்ப்பில் படத்தின் கதை  கரு என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்  அதை  படிக்க  ஆரம்பித்தேன்  ஆனால் அந்த விமர்சனத்தில் அவர்  பசுபதி கூட்டாளிகளோடு திருட போவதில் ஆரம்பித்து கடைசியில்  ஆதி சாவது வரைக்கும் ஒன்றையும் விடாமல்    எழுதிவிட்டார் , படத்தின் பெரிய சுவாரஸ்யமே   பரத்தை யார்   கொன்றார்கள்   என்பதுதான்  , அதையும்  அதில் சொல்லிவிட்டார் , கடைசியில் நான் அந்த படத்தை பார்க்கும்போது  கொஞ்சம்கூட  சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது . அதே கதைதான்   நான் பெரிதும்  எதிர்பார்த்த அம்புலிக்கும் , இவர்களின் விமர்சனம் படித்திவிட்டு  படம் பார்ப்பது  என்பது  , அதே கண்கள் திரைப்படத்தை கிளைமேக்ஸ்  காட்சியை   முதலில்  பார்த்து  விட்டு   படம் பார்க்க ஆரம்பிப்பதற்கு  ஒப்பானது.  ஐய்யா  விமர்சன  புலிகளே  நீங்கள்  ஒரு பதிவை  தேற்றி  அதன்  மூலம்  ஹிட்ஸ்  வாங்க  வேண்டும் என்பதற்காக அடுத்தவனின் சுவாரஷ்யத்தை  கெடுக்க  வேண்டுமா?  என்னை  போன்று உங்களால் பாதிக்கபட்டவன் உங்கள் விமர்சனத்தை அடுத்து  கண்டிப்பாக படிக்க மாட்டன்  , ஆனால் உங்களை  பற்றி  தெரியாதவன்  ஒரு ஆர்வத்தில் உங்கள் விமர்சனத்தை படம் பார்ப்பதற்கு முன்னால் படிக்க நேர்ந்தால், படம் பார்க்கும் போது அவன் கதி ? கொஞ்சம் திருந்துங்க பாஸ் (இப்படி விமர்சனம் எழுதுகிறவர்களை   கூட பொறுத்து கொள்ளலாம்  ஆனால் அவர்கள் மொக்கை  விமர்சனத்தையும்  படித்து  விட்டு     உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை என்ற ரீதியில் பின்னூட்டம் போடுபவர்களை பார்த்தால்தான்   நடு ரோட்டில் அம்மணமாக ஓடவிட்டு நாயைவிட்டு  கடிக்க வைக்க வேண்டும் என்ற அளவுக்கு வெறி  வருகிறது)   


இவர்களை விட பிரபல பதிவர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் பண்ணும் அளப்பரைகளை பார்க்கும் பொது கவுண்டமணி  பாணியில் அய்யோ ஆண்டவா என்னை ஏன் இந்த பிரபல பதிவர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க வைக்கிற என்று கத்தனும் போல தோன்றுகிறது. தன்னை ஒரு சினிமாகாரனாக  சொல்லிக்கொண்டு சினிமாவில்   ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளி போடாமல் எல்லாம் தெரிந்த அறிவாளி  போல எழுதுகிறவர்கள் இங்கே ஏராளம். அதிலும் சிலர் சினிமா  இயக்குனராக போகிறேன்  என்று பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பார்கள்  , ஆனால் இன்றைய வரைக்கும் ஒரு லைட்மேனாக  கூட ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில்  எவனுக்குமே படம் எடுக்க தெரியவில்லை என்ற ரீதியில் அவர்களின் பதிவுகள் இருக்கும் .  சினிமாவில் பல சாதனைகளை புரிந்த பாக்கியராஜ் போன்ற ஜாம்பவான்களே ஒரு படைப்பை விமர்சிக்கும் போது அந்த படைப்பாளியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதன் தவறுகளை நாசூக்காக வெளிபடுத்துவார்கள்  , ஆனால் இவர்கள் என்னவோ சினிமாவின் பிதாமகன் தாமஸ் ஆல்வா எடிசனை போல தங்களை நினைத்துகொண்டு நீயெல்லாம் எதுக்கு  படமெடுக்க ஆசைபடுற என்று  கொச்சையாக கேட்பார்கள் ஆனால் அண்ணே இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஏன் ஒரு படம் எடுக்க கூடாது? இவ்வளவு அறிவாளியா இருக்கீங்களே உங்களுக்கு எப்படின்னே  இன்னும்  வாய்ப்பு  கிடைக்காமல் இருக்கு என்று யாராவது ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டால் அவ்வளவுதான் அரசியல்வாதிகளை போல தன்  அல்லக்கைகளை விட்டு அவர்களை சைக்கோ , பைத்தியம் , கேனா பூனா என்று திட்டி  அவர்களை மனரீதியாக தாக்குவார்கள். கடைசியில் அவர்களும் அவர் அல்லகைகளும் தங்களை தாங்களே பாராட்டி கொண்டு திருப்திபட்டு கொள்வார்கள். ஆனால் கடைசி வரைக்கும் அந்த பின்னூட்டத்துக்கு பதிலே வராது, . ஆனால் உண்மையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் இவர்களை போல வெட்டி நியாயம் பேசிக்கொண்டு திரியமாட்டார்கள் என்பதற்கும் பதிவுலகில் அம்புலி பட இயக்குனர்களை போல உதாரணங்கள் உண்டு , ஒன்றுமே செய்யாமல் சிலர் இவ்வளவு வெட்டி நியாயம் பேசும்போது , தமிழில் முதல் நேரடி 3டி படம் எடுத்த இவர்கள் எவ்வளவு பேசலாம்? ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட தங்களை  உயர்த்தியோ , கர்வபட்டோ , இல்லை பிறரை அசிங்கபடுத்தியோ எழுதியிருக்க மாட்டார்கள். இதைத்தான் நிறை குடம் கூத்தாடாதுன்னு சொல்லுவாங்க போல ....

தேசிய விருதுகள் 

சென்ற வருட இந்திய தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, வாகை சூட வா படத்திற்கு சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது கொடுத்திருக்கிறார்கள்.தேசிய அளவில் சிறந்த படமாக விருது  தரக்கூடிய தகுதி அந்த படத்திற்கு உண்டு , காரணம் அது எடுத்து சொன்ன ஒரு விஷயம் , கல்வியின் அவசியத்தை மிக எதார்த்தமாக  சொல்லிய படம் ,   தேசிய விருது பெற்ற படங்கள் இதை விட சிறந்த படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எனக்கு பிடித்த ஒரு படம் விருது பெற்றது மகிழ்ச்சியான விசயமே.
                                                   "Hats off to vakai sooda vaa team"

10 comments:

ILLUMINATI said...

A honest post after a long time. இவனுக இப்படித் தான் மச்சி. Waste of time. ஆமா, அந்த லிஸ்ட்ல நான் இல்ல தான? :)

பிகு:ரொம்ப நாள் ஆச்சு.எப்படி இருக்க மச்சி? :)

ILLUMINATI said...

Comment moderation? Why?

DHANS said...

after a long time I have seen a very good post from you. excellent post.

"ராஜா" said...

//பிகு:ரொம்ப நாள் ஆச்சு.எப்படி இருக்க மச்சி? :)

நல்ல இருக்கேன் மச்சி ... பேஸ் புக்குல பாக்கிறதோட சரி ... பதிவுலகம் பக்கம் தலைகாட்டுறதே இல்லையா?

"ராஜா" said...

//Comment moderation? Why?

சில கன்றாவிகளை தவிர்க்கத்தான் நண்பா... முன்ன மாதிரி அடிக்கடி கமெண்ட் பாக்க முடியலை , அதனால உடனுக்குடன் அவனுங்களை தாளிக்கவும் முடியலை , அதான் தவிர்த்து விடுவோம்னு இந்த முடிவு

"ராஜா" said...

after a long time I have seen a very good post from you. excellent post.

tanx nanbaaa.. இப்ப எல்லாம் மொக்கையாத்தான் எழுத வருது நண்பா...

பாலா said...

நண்பரே, உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு. நிறைய பேர் விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று கதை முழுவதும் சொல்லி விடுகிறார்கள். அதே போல படத்தை விமர்சனம் என்கிற பேரில் மிக மோசமான கருத்துக்களால் வசை பாடி மகிழ்கிறார்கள். என்னை பொறுத்தவரை இவர்கள் எழுதுவது ஸ்பாய்லர்கள்.

கடைசியில் சொல்லி இருக்கிறீர்களே, திறமை உள்ளவன் அதிகம் பேசமாட்டான் என்று. நூறு சதவீதம் உண்மை.

ILLUMINATI said...

அப்பப்ப வந்து நண்பர்களோட பதிவுகள மட்டும் சைலன்ட்டா படிக்கிறதுண்டு மச்சி. :)

Karthikeyan said...

நானும் அந்த தவறை செய்துள்ளேன். இனி திருத்திக்கொள்ளப்படும். அனேகமாக எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதுவது இல்லை. சில குறிப்பிட்ட நல்ல படங்களுக்கு மட்டும் நான் எழுதியது உண்டு.

முனீஸ்குமார் said...
This comment has been removed by the author.

LinkWithin

Related Posts with Thumbnails