Followers

Copyright

QRCode

Wednesday, August 17, 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....




ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை  புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றைய மோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....


அவரின் சில நடவடிக்கைகள் ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா இல்லை காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா என்று சந்தேகப்பட வைக்கின்றன? அவர் காங்கிரஸை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? நம் நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்து கொண்டு இருக்கிறதா? ஏன் கர்நாடகாவில் மாற்றி மாற்றி ஊழல் புகாரில் சிக்கி சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கபட்ட ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ரொம்பவும்  யோசித்த ஒரு கட்சியை பற்றி அவர் வாயே திறப்பதில்லை, மாறாக அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல அவர் நடந்து கொள்வது ஏன்? நரேந்திர மோடியை ஊழல் இல்லாத அரசியல்வாதி என்று தன் வாயால் உளறிவிட்டு மீடியாக்கள் கண்டனம் தெரிவித்தவுடன் நான் சொல்லவந்ததே வேற என்று கைப்புள்ள வடிவேலு போல அசடு வழிந்தது ஏன்?


இவர் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தால் காங்கிரசுக்கு ஊழலில் கொஞ்சமும் சளைக்காத BJP கட்சியின் ஆதரவை வேண்டாம் என்று தைரியமாக உதறிவிட்டு மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி இறங்கி இருக்கலாமே... BJP , ஆர்‌எஸ்‌எஸ் என்று யோக்கிய சிகாமணிகளின்  ஆதரவை அவர் ஏன் தேடி போகவேண்டும்... ஊழல் எதிர்ப்பு உணர்வுக்கு  அரசியல் சாயம் பூசி வேறு ஒரு கட்சியை ஆட்சியில் உக்காரவைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் உள்நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இதனால் ஏற்படுகிறதே...

அதேபோல அவர் காங்கிரஸ் கட்சியையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமே ஊழல்வாதிகள் என்று எதிர்த்துக்கொண்டு இருக்கிறார் , ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அவர்களை இயக்கும் இந்திய பணமுதலைகளை அவர் கண்டுகொள்வதே இல்லை... ஊழலின் ஆணிவேறே அவர்கள்தானே , அவர்களை ஏன் இவர் தன்னுடைய போராட்டங்களில் விமர்சிப்பதே இல்லை... அடுத்து பி‌ஜெ‌பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் தயவு தேவைப்படும் என்பதால் அவர்களை பற்றி வாயே திறப்பதில்லையோ என்ற சந்தேகமும் இதனால் வலுக்கிறது...  



சரி ஊழலுக்கு எதிராக போராடும் இவர் என்ன யோக்கியனா என்று காங்கிரஸ் இவர் மீது ஒரு ஊழல் குற்றசாட்டை வைத்தது , "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"க்கு மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் கையாடல் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை பல வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்தது .... அவர் இந்த புகாரை சட்டப்படி சந்தித்து தான் ஊழல்வாதி இல்லை என்று நிரூபித்து இருந்தால் இவர்மேல் நம்பிக்கை வந்திருக்கும் , ஆனால் இன்று காங்கிரஸ் அந்த அறிக்கையை தூசி தட்டி வெளியிட்டதும்  என் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள் , அவர்கள் இந்த அறிக்கையை திரும்ப பெரும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று ஸ்டண்ட் அடித்தார் இந்த இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் இரண்டாம் மோகன்லால் காந்தி...
இவர் ஊழலுக்கு எதிராக போராடும் முன்னால் தன் மீது இருக்கும் இந்த ஊழல் கரையை துடைத்து விட்டல்லவா இறங்கி இருக்க வேண்டும்...

அதே போல லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரப்படுவதை இவர் ஏன் கடுமையாக எதிர்க்கிறார்? ஏன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊழலலே செய்வதில்லையா? சில சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு தொடக்கபட்ட தொண்டு நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கருப்பு பணத்தை காப்பாற்ற பணமுதலைகளாலும் , அரசியல்வியாதிகளாலும் மறைமுகமாக நடத்தபடுபவைதானே, அங்கு மட்டும் ஊழல் இருக்காது என்று எப்படி கண்டிப்பாக சொல்ல முடியும்....


இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது ஊழல் ஒழிந்து உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ற நம் மக்களின் ஏக்கத்தை பயன்படுத்தி ஹசாரேவும் அவர் பின்னால் இருப்பவர்களும் நடத்தும் அரசியல் நாடகம் போல ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை... ஆனால் ஹசாரேவின் இந்த போராட்டம் மூலம் விழைந்திருக்கும் ஒரே நன்மை , ஊழல் ஒழிய வேண்டும் , நாடு முன்னேற வேண்டும் என்ற வேட்கை நம் நாடு முழுவதும் மக்கள் மனதில் காட்டு தீயாய் பரவி கிடக்கிறது என்ற உண்மையை நம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது... அதற்காக மட்டும் ஹசாரேவுக்கு ஒரு இந்தியனாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்...

டிஸ்கி 1 : அண்ணா என்ற பெயருக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகை போல , அன்று  ஒரு அண்ணா தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்தார் , இன்று வடக்கில் ஒரு அன்னா ஆப்பு வைக்க துடித்து கொண்டிருக்கிறார்...
டிஸ்கி 2 : இந்த பதிவில் நான் என்னுடைய சந்தேகங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் , மேலும் நான் ஹசாரேவை சந்தேகபடுவதால் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் கிடையாது.. ஊழல் முற்றும் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படும் சாதாரண குடிமகன்களில் நானும் ஒருவன் ...  
  


  


14 comments:

சங்கர் said...

ஆகா.. அடடா.. என்னமா எழுதியிருக்காரு அண்ணன். அண்ணனுக்கு ஒரு சோடா குடுத்து மாலை போடுங்கப்பா. அண்ணே.. நீங்க இங்க எழுதுனத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சி, பக்கத்துலயே உங்களையும் உக்கார வச்சிருவோம். பின்னால வரப்போற சந்ததிகள் இத படிச்சி பார்த்து பொங்குறதுக்கு வசதியா இருக்கும்.

"ராஜா" said...

அண்ணே தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சி வச்சா பிரபலம் ஆகுறதுக்கு ரொம்ப லேட் ஆகும் , அதுவுமில்லாம அதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக், இப்ப ட்ரெண்ட் உண்ணாவிரதம் இருக்கிறதுதானாம் , ஸ்பீடா ஃபேமஸ் ஆகிடலாம் ... உங்க கோரிக்கைய நான் பரிசீலனை பண்ணுறேன் , அப்படியே நீங்களும் வந்து உக்காருங்க உண்ணாவிரதத்துல , நாளைக்கு வரலாறுல நாமளும் இடம் பிடிக்கணும்ல ....

settaikkaran said...

ஒத்த கருத்துடையவர்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பிரிவு அரசியல் என்ற பெயரில் ஊழலை ஊக்குவிக்கிறது; இன்னொரு குழு ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் மக்களை மந்தைகளாக்கிக் கொண்டிருக்கிறது. இது போல பலர் உண்மைகளை எடுத்துச் சொல்லி நடுநிலையிலிருந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஊக்குவிக்க வேண்டும். நல்ல இடுகை!

பாலா said...

நியாயமான கேள்விதானே? பதில் கிடைக்கிறதா என்று கொஞ்சநாள் பொறுத்தால் தெரிந்து விடும்.

நாவலந்தீவு said...

ஊழலை ஒழிக்க ஒரு உன்னத தலைவர் எப்போது வருவார் என அனைவரும் எதிர்ப்பர்ப்பதை விட ஒவ்வொருவரும் ஒரு உண்மையான இந்தியக் குடிமகனாக நடந்துக் கொண்டாலே போதுமானது.

Elayaraja Sambasivam said...

//அவர் காங்கிரஸை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? நம் நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்து கொண்டு இருக்கிறதா

அது எப்படிங்க காங்கிரஸ் வேற ஊழல் வேறன்னு கண்டுபுடிசிங்க, இந்த ஒரு காரணத்துக்காக உங்களக்கு என்ன விருது வேணும்னாலும் குடுக்கலாம் .

பல கோடி இந்திய மக்களை எப்படி மிக சாதரணம இங்கிலாந்துகாரன் ஆண்டான் அப்படின்னு உங்களோட கருத்துக்களே சொல்லுது.

காந்தி மட்டும் இப்ப உண்ணா விருதம் இருந்தார்ன்ன வச்சிக்குங்க, உன்னோட முதல் பிள்ளை ஒரு குடிகாரன் நீ அவன போய் திருத்து..அப்படின்னு சொல்லி அனுப்பி வச்சிருப்பிங்க,

இந்த வயசான காலத்துலயும் அவரால முடிஞ்சத செய்றாரு, அத பாரட்டலனாலும் பரவாயில்ல, அடுத்த வேலைக்கு எந்த ஓட்டல் போகலாம்னு அரை மணி நேரம் கலந்து பேசற நமக்கு, நம்ப நட்ட பற்றிய சிந்தன கொஞ்சமாவது இறுக்கா.

அடுத்தது காங்கிரஸ் மட்டும் தான் ஊழல் செய்றவங்களா மத்தவங்க இல்லையா.

படிச்சா நம்ப இது மாதிரி குழந்த தனமா பேசலாமா, எப்பவும் அதிகமான எதிரிங்க இருக்கும் போது, பலமானவன முதலா வீழ்த்தனும், அதுக்கு மத்தவங்க யாரும் அவனுக்கு உதவாம பார்துக்க வேண்டியது மிக முக்கியமான வேலை, அப்பதான் நாம எதுலையும் வெற்றி பெற முடியும், காந்தி சத்தியாக்ரகம் பண்ணும் போது, ஆங்கிலேயர போல பல எதிரிங்க இந்திய முழுதும் இருந்தாங்க.

சுதந்திரம் குடுக்கறதுக்கு கால தாமதம் பண்ண, ஆங்கிலேயர்கள் முதலா உங்க கிட்ட இருக்கற பிரச்சினை சரி பண்ணிட்டு வாங்க, நம்ப அப்புறம் பேசி முடிப்போம். ஆனா அன்றைக்கி எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கரம் நீங்க கிளம்புங்க அப்படின்னு காந்தி சொல்லலைனா நமக்கு சுதந்திர தினம் எல்லாம் கிடைச்சிருக்காது,

இந்திய வரலாறு மட்டும் இத சொல்லல, உலக தத்துவம், வரலாறு முழுக்க இருக்கறது எல்லாம் பிரித்தாளும் விதி.

Admin said...

intha nerathil intha, Nallathu natakkudhuna natakka vidungapa. sandhegan ippo venam.


thanks

vivek kayamozhi said...

உங்களுக்கு தான் தெளிவான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்..!!!
அவர் காங்கிரசை தாக்கவில்லை, ஆளும் அரசை வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர நிர்பந்திக்கிறார்.
ஊழலை எதிர்த்து தான் இவ்வளவு போராட்டமும், அதற்க்கு அவர் அணைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கேட்கிறார், பி.ஜெ.பி, கம்யுனிஸ்ட்,ஜனதா உட்பட அனைவரிடமும் கேட்கிறார். ஏனெனில் பாராளுமன்றத்தில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும், அதற்கு மெஜாரிட்டி வேண்டும்.

நிச்சயமாக சொல்வேன் நீங்கள் காங்கிரசு மனோநிலையிலிருந்து பார்ப்பதால் தான் உங்களுக்கு தப்பாக தெரிகிறது.
காங்கிரசு அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு அணுகுமுறை, வேண்டாவிட்டால் வேறுஒரு அணுகுமுறை என நடிப்பது தெரியாததா? ராம் தேவ் பாபா வை விமான நிலையத்தில் போய் வரவேற்றது. அவரை வைத்து அண்ணாஜி போராட்டத்தை அமுக்கிவிடலாம் என்று நினைத்து,, பின் அவர் உண்மையாகவே போராடுகிறார் என்று தெரிந்ததும் நடுராத்திரி போலிசை விட்டு விரட்டியது.
இப்போது அண்ணா மீதும் கூலிகொலைகாரர்கள்(செய்திதொடர்பாளர்கள்) மூலம் சேறை வீசுகிறது. அவர் 30 வருட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறவர், பாம்பே வில் சிவசேன+பி.ஜெ .பி மந்திரிசபயிலிருந்த 2 ஊழல் மந்திரிகளையும் உண்ணா விரத போராட்டம் மூலம் நீக்கவைதிருக்கிறார்..முழுமையாக தெரிந்துவிட்டு பிறகு போராடும் ஒருவரைபற்றி விமர்சனம் செய்யுங்கள். அதற்க்கு முன் இந்த பிரச்சினைக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்? ஒரு துரும்பையாவது நகற்றியிருக்கிறோமா என்று எண்ணிப்பாருங்கள். குறை சொல்வது யாருக்கும் எளிது....

vivek kayamozhi said...

ஊழல் நடக்கும் இடத்துக்கெல்லாம் சென்று போராட்டம் நடத்த அவர் ஒன்று இந்தியன் தாத்தா இல்லை.

அணைத்து மாநில , மத்தியஅரசு ஊழல்களுக்கும் ஆப்படிக்கும் பொதுவான ஒரு மசோதா வருவதற்காக மொத்தமாக போராடுகிறார்.
அதைவிட்டு எங்க அருப்புக்கொட்டயில பஸ் ஸ்டாண்ட் கக்கூச்சை காண்ட்ராக்ட் எடுத்திருப்பவன் சரியாக கிளீன் பண்ணாமல் நாற வைத்துள்ளான் , R .T .O லஞ்சம் கேட்கிறான் அதற்கெல்லாம் அவர் வந்து உண்ணாவிரதம் இருக்கணும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம்.

R SS சப்போர்ட் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? RSS ஐ பற்றி வேறு ஒரு கட்டுரை எழுதி விவாதம் செய்யலாம். மோடி ஊழல் செய்யவில்லை என்றுதானே சொன்னார் , அது உண்மைதானே? இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்த ஆதாரத்தை கூறுங்கள்.
உலக வரலாற்றில் இதுவரை யாரும் அடிக்காத கொள்ளை (2G , காமன்வெல்த்) அடித்துவிட்டு ஒன்றுமே செய்யாததுபோல் சத்தமாக ஏப்பம் விடுகிறார்கள். ஒரே நாத்தமாக இருக்கிறது,
அரசை காப்பாற்றிக்கொள்ள MP களுக்கு லஞ்சம் கொடுத்ததும் மாட்டியிருக்கிறார்கள், இன்னும் இவர்கள் ஊழலை ஒழிக்க சரியான சட்டம் கொண்டுவருவார்கள் என்று நம்பவேண்டுமாம். தெரிந்தால் ஆணித்தரமான ஆதாரத்தோடு எழுதுங்கள்,வரவேற்கிறோம் உங்கள் கருத்து உண்மையென்றால், அதைவிட்டு சப்பையான காரணங்களை கூறி ஆளும் ஊழல் வியாதிகளுக்கு ஒத்து ஊதாதீர்கள்...!!,

"ராஜா" said...

கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ...

//காந்தி சத்தியாக்ரகம் பண்ணும் போது, ஆங்கிலேயர போல பல எதிரிங்க இந்திய முழுதும் இருந்தாங்க.

சுதந்திரம் குடுக்கறதுக்கு கால தாமதம் பண்ண, ஆங்கிலேயர்கள் முதலா உங்க கிட்ட இருக்கற பிரச்சினை சரி பண்ணிட்டு வாங்க, நம்ப அப்புறம் பேசி முடிப்போம். ஆனா அன்றைக்கி எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கரம் நீங்க கிளம்புங்க அப்படின்னு காந்தி சொல்லலைனா நமக்கு சுதந்திர தினம் எல்லாம் கிடைச்சிருக்காது,

இந்திய வரலாறு மட்டும் இத சொல்லல, உலக தத்துவம், வரலாறு முழுக்க இருக்கறது எல்லாம் பிரித்தாளும் விதி.


இதுல இருந்து நீங்க என்ன சொல்லவரீங்கா .. அண்ணா ஹசாரே அடுத்த காந்தி என்றா? காந்தி ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றி ஃபிரெஞ்சுகாரணிடம் கொடுப்பதற்காகவா போராடினார்....

"ராஜா" said...

// intha nerathil intha, Nallathu natakkudhuna natakka vidungapa. sandhegan ippo venam.


நல்லது நடந்தால் நன்றிதான் , ஆனால் இவர்களின் இலக்கு அதை நோக்கி இல்லையே...

"ராஜா" said...

நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று மாற்றி மாற்றி பேசும் இவர்களால்தான் ஒழலை ஒழிக்க முடியும் என்று நாம் நினைப்பதுதான் நம் நாட்டின் சாபக்கேடு

Karthikeyan said...

//இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது ஊழல் ஒழிந்து உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ற நம் மக்களின் ஏக்கத்தை பயன்படுத்தி ஹசாரேவும் அவர் பின்னால் இருப்பவர்களும் நடத்தும் அரசியல் நாடகம் போல ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை... //
எனக்கும் அந்த டவுட் இருக்கு. இருந்தாலும் ஒரு பெரிய மனுசன் ஒரு அரசாங்கத்துக்கு எதிரா ஊழலை ஒழிக்கனும்னு போராடுறாரு. நாம எல்லாம் உண்ணாவிரதம் இருக்கலைன்னாலும் மனதளவில் சப்போர்ட் பண்ணுவோம்.

Vetirmagal said...

Well said.

:You may like to read this too..

http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1050&StoryStyle=FullStory

Thanks and regards,

LinkWithin

Related Posts with Thumbnails