Followers

Copyright

QRCode
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்








சரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்,  திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது. எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும் வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள் விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு சென்றிருந்தோம்.. 


வரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்  அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய  ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்...  வண்டியில் ஓடிய டிவியில் எம்‌ஜி‌ஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன .  வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள் சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...



நாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில் அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர் நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும்  அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது ,  என்னை பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது  , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும் அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று  பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்.. 





என் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்‌டி‌டி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு  ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே  என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண்டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டி‌வி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக  என் வாழ்க்கையை லேசாக  உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது... 

சரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு எரிச்சல்தான் வந்தது...   அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி  கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம் ஊனத்திற்கு பதிலாக விபத்து ...  தில்லாலங்கடி என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன் நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும்  , அதுவே அந்த படம் நமக்கு பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன் குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும் பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்?






இந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும் பொது நம் ஞாபகத்தில் இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி...  விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில் உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே காரணம்...  நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை  மட்டும் சாகும் வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள் என்று நம் சமூகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபோகிறது..  

 அனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்... 



Saturday, June 18, 2011

தமிழ் சினிமாவின் சத்தியஜித்ரே - பாலா



பாலா என்ற படைப்பாளியின் படைப்பு திறமை நம் நாடே அறிந்தது ... இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை , அடிதட்டு மக்களின் இருட்டு வாழ்க்கையை காட்டி வெளிச்சத்திர்க்கு கொண்டு வந்தவர் ... சத்தியஜித்ரேவுக்கு பின்னர் இந்திய சினிமாவில் ஒளி வீசும் ஒரு வைர கல் இந்த பாலா... இப்படியெல்லாம் அவருக்கு சொம்படித்து கொண்டு இருக்கும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார் என்ற டைப்  அறிவுஜீவிகள் இதற்க்கு மேல் இந்த பதிவை படிக்க வேண்டாம் .. மீறி படித்து விட்டு ஒரு பதிவையே ஒழுங்கா எழுத தெரியாத நீயெல்லாம் பால்வீதி படம் எடுக்கும் (எத்தனை நாளைக்குத்தான் உலக படம்னு சொல்றது , நம்ம ஆளு அதையெல்லாம் தாண்டி பால்வீதிக்கே படம் எடுக்கிறவரு) பாலாவை குறை சொல்ல நீ யாரு என்று பின்னூட்டத்தில் வாந்தி எடுக்க வேண்டாம் ....

தமிழ் சினிமாவை பிடித்த மிக பெரிய சாபக்கேடு என்னவென்றால் , மிகைபடுத்தபட்ட உணர்வுகளை எதார்த்தங்கள் என்று ரசித்து , அதை படைத்தவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதுதான் ... சேது என்று ஒரு படம் , படம் வந்த புதிதில் எல்லா பத்திரிக்கைகளும் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடின ... ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமாவின் முதல் படம் என்றெல்லாம் படத்திர்க்கு ஜல்லி அடித்தது  ... அப்படி என்ன அந்த படத்தில் இருந்தது? ரௌடிதனம் செய்கிறான் ,காதலிக்கிறான் , பைத்தியமாகிறான் , குணமாகிறான் , காதலி சாகிறாள் , மீண்டும் பைத்தியமாகிறான்... இதில்  அப்படி என்ன தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படைப்பு இருக்கிறது? 

முதல் பாதியில் வரும் காட்சி அமைப்புகள் அந்த கால கட்டத்தில் புதுமையான காட்சி அமைப்புகளாய் இருந்தது என்பதை தவிர அந்த படத்தில் வேறு எந்த விசேசமும் கிடையாது... மேலும் அந்த படத்தில் எந்த நிகழ்வுகளுமே இயல்பாய் கதைக்கு தேவையான நிகழ்வுகளாய் இருக்காது .. எல்லாமே வலிந்து திணிக்கபட்டதை போல , ஒரு சோகத்தை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திர்க்காய் நடப்பதை போலதான் திரைக்கதை இருக்கும் ... இந்த படத்தை பார்த்து விட்டு எல்லாரும் பத்து நாளைக்கு சோறு இறங்கவில்லை , பத்து மாதம் பேதி போச்சு என்று அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை .. எனக்கு தெரிந்து எந்த படமும் அந்த திரையரங்க வாசல் வரைக்கும்தான் , மிஞ்சி போனால் அவர்கள் வீட்டுக்கு போய் சாப்பிடும் வரைக்கும் இல்லை வேறு வேலை பார்க்கும் வரைக்கும்தான் மனதில் இருக்கும் , பத்து நாட்கள் எல்லாம் ஒரு படத்தின் பாதிப்பிலேயே இருந்தால் உங்களை கீழ்பாக்கத்திர்க்கு அனுப்பி விடுவார்கள் ... மனைவி பத்தினியாக இருந்தால் மட்டுமே கடவுள் கண்ணுக்கு தெரிவார் என்று சொன்னவுடன் எல்லாரும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார் என்று சொல்லியதை போலத்தான் அறிவுஜீவிகளுக்கும் , சினிமா பற்றிய புரிதல் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பாலாவின் படம் புரியும் என்று விகடன் போன்ற அறிவுஜீவி பத்திரிக்கைகள் கிளப்பி விட இன்று வரை நானும் அறிவாளிதான் என்று நிரூபிக்க பாலாவின் படங்களை ஆகா ஓகோவெண்டு  கொண்டாடும் போலி அறிவுஜீவிகள்தான் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள் ...     

பாலாவின் படங்கள் நன்றாகவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் , பாலாவின் படங்கள் ரசிக்கும் படி இருக்கும் ஒத்துகொள்கிறேன் , ஆனால் ரசிக்கும்படியாக படம் எடுக்கும் எல்லாருமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடபடும் தகுதி உடையவர்கள் கிடையாதே ... ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களை யதார்த்தம் இல்லாமல் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட சினிமாதனங்களோடு விக்ரமன் தொடர்ந்து படைத்து வந்தால் அவரை டெம்ப்ளேட் இயக்குனர் என்று ஒதுக்கி வைக்கிறோம் .. ஆனால் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத , யதார்த்ததுக்கு புறம்பான, மசாலா தூக்கலாக ,  சினிமாத்தனங்கள் நிறைந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் ...


பிதாமகனை எடுத்து கொள்ளுங்கள் .. எந்த ஊரில் வெட்டியான் இப்படி இருக்கிறான் ... எந்த ஊரில் அவனை அப்படி இருக்க விடுவார்கள் ... இதே கதையை அந்த வெட்டியான் கதாபாத்திரத்தை ஒரு இயல்பான மனிதனாக வைத்து எடுக்க முடியாதா? அப்படி ஒரு இயல்பான மனிதனாக காட்டி இவரின் திரைக்கதை யுக்தியினால் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகனின் மனதில் ஆழமாக பதியவைத்து , அந்த கதாபாத்திரத்துக்கு விருது வாங்கி கொடுத்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒளிரும் வைரமாய் அவரை ஏற்றுக்கொள்ளலாம் , ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏதோ வேற்றுகிறக மனிதனை போல உருமாற்றி , கஷ்டபடுத்தி அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ரசிகனின் மனதிர்க்குல் நுழைத்ததால் எனக்கு அவர் பித்தளையாகத்தான் தெரிகிறார் ...

அந்த படத்தில் சூரியா செய்யும் சேட்டைகளை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல்தான் வந்தது , அதுவும் லைலா ரயில்வே ஸ்டேஷன் முன்னாள் புழுதியில் புரண்டு அழும் காட்சியில் அந்த எரிச்சல் உச்சத்திர்க்கு போனது .... ஆனால் இதையும் பார்த்துவிட்டு சே என்ன படம்யா... சினிமானா இதுதான்யா என்று பலர் பாராட்டிய போது எனக்கு பத்தினி கடவுள் கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை .... அதுவும் சூரியா இறந்தவுடன் அஷ்டகோணலாக காட்டபடும் லைலாவின் முகத்தை பார்த்து , இதுதான் லைலாவுக்கு மைல்கள் படம் , கண்டிப்பா பாப்பாவுக்கு விருது இருக்கு என்று சொன்னவர்களை அம்மணமாக நடுரோட்டில் ஓட ஓட அடிக்க வேண்டும் என்ற வெறி படம் பார்த்து கொண்டிருந்த போது எனக்கு வந்தது ...

அந்த படத்தில் விக்ரமை ஏன் அப்படி காட்ட வேண்டும் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை ..ஒரு வேளை இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த அறிவுஜீவிகள் போல  எனக்கு அறிவு இல்லையோ என்னவோ? ஏதாவது உள் வெளி குறியீடுகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன் .. நானும் அறிவாளி ஆகி கொள்கிறேன் ...


எல்லா படத்திலேயும் ஒரு வித்தியாசமான இயல்புடைய கதாபாத்திரம் , அதற்க்கு ஒரு அளவுகடந்த பாசம் , கடைசியில் அதீத வன்முறை என்று ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கும் இவரை ஏன் யாரும் டெம்ப்ளேட் இயக்குனர் என்று சொல்லுவதில்லை? இவர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் விளிம்பு நிலை மக்களை பற்றியே படம் எடுக்கிறார் ... அதில்தான் கிறுக்குதனமான காட்சிகளை வைத்தாலும் அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமா? (பல் டாக்டர் மகள் கிறுக்கி , சில்லறை திருடனை கலெக்டர் பாராட்டுதல்  இவரின் படங்கள் அவர்களின்  உண்மையான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றனவா? சத்தியமாக கிடையாது  .... இவரின் ஒரே ஒரு பலம் அந்த கதைக்களங்களை கொண்டு கண்கட்டி வித்தை காட்டி அதீத வன்முறையை பரப்பி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதுதான்... காசுக்கு காசும் ஆச்சி , பேருக்கு பேரும்  ஆச்சி .... அந்த படங்கள் வசூலிக்கும் காசிற்க்கு அவை தகுதியானவைதான் ... ஆனால் படம்னா இதுதான்யா படம் என்று ஜல்லி அடிக்கும் அளவுக்கு இவரின் படங்கள் கண்டிப்பாக இருந்ததில்லை ....  


இப்பொழுது அவன் இவன் வந்திருக்கிறதாம்.. பாருங்கள் மற்ற படங்களை கிழித்து தொங்க போடும்  திரை விமர்சகர்கள் கூட , விஷால் நடிப்பு சூப்பர் , அந்த கதாபாத்திரம் பட்டைய கிளப்புது , கிளைமாக்ஸ் நெஞ்சு அதிருது என்று ஜல்லி அடிப்பார்களே தவிர யாருமே முகத்தில் அறைந்தாற்போல் உங்களுக்கு  வேறு மாதிரி படமே எடுக்க தெரியாத பாலா என்று கேள்வி கேட்கமாட்டார்கள் ... அப்பறம் அவர்கள் பெயருக்கு முன்னாள் இருக்கும் அறிவுஜீவி பட்டம்  போய் விடுமே... அதானால் அவன் இவன் பார்க்காமலேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் தமிழ்சினிமாவின் "சத்தியஜித்ரே" பாலா  



Thursday, May 26, 2011

சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....



இந்த வருடத்திற்கான திரைப்பட துறைக்கான தேசிய விருதுகள் அறிவித்து பல நாட்கள் ஆகி விட்டது... வழக்கம் போல இந்த வருடமும் சரியான திறமைக்கு விருது வழங்காமல் அந்த விருதின் "பாரம்பரியத்தை" காப்பாற்றி இருக்கிறார்கள் நம் விருது  கமிட்டியாளர்கள்... நான் கிண்டலுக்கு சொல்லவில்லை நம் தேசிய விருதுகளின் தரம் எவ்வளவு கேவலமாக மாறி இருக்கிறது என்பதற்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் , சிறந்த நடனத்திர்க்காண விருதும் அவர்கள் யாருக்கு தந்திருக்கிறார்கள் என்பதே சாட்சி ...


ஆடுகளம் படத்திர்க்கு சிறந்த நடனத்திர்க்காண விருது ... அந்த படத்தில் அப்படி என்ன விருது கொடுக்கும் அளவுக்கு தகுதியான நடனத்தை  பார்த்தார்கள் என்று தெரியவில்லை .... கைலியை முகத்தில் பொத்தி கொண்டு டிக்கியையும் இடுப்பையும் ஆட்டுவதற்க்கு பேர் நடனமாம் , அதற்க்கு ஒரு விருது வேறா? பரத நாட்டியம் , கதகளி என்று பல பாரம்பரியமான , அழகியலான நடன வடிவங்களை உலகிற்க்கு தந்த இந்திய திருநாட்டில் இப்படி ஒரு நடனத்திர்க்கு விருது... கேட்கவே கேவலமாக இருக்கிறது .... சரி மக்கள் அந்த நடனத்தை பெரிவாரியாக ரசித்தார்கள் , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்களின் ரசனைக்கு மதிப்பளித்து அந்த விருதை கொடுத்திருப்பார்கள் என்று சொன்னால் , இதை விட மக்களால் அதிகம் ரசிக்கபட்ட முன்னாள் இடை அழகி சிம்ரன் ஆடிய ஆல்தோட்ட பூபதி மாதிரியான அறைவேக்காடு பாடல்கள் அனைத்திர்க்கும் அவர்கள் தேசிய விருது தந்திருக்க வேண்டுமே? .... என்னை பொறுத்தவரை அதற்க்கும் ஆடுகளத்திர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை ... தனுஷ் டிக்கியை ஆட்டினால்  விருது , சிம்ரன் இடுப்பை ஆட்டினால்  அது ஆபாச பாடலா? மக்கள் ரசிப்பதற்கெல்லாம் விருது தரவேண்டும் என்றாள் வருடா வருடம் நீங்கள் சிறந்த நடிக்கைக்கான விருதை ஷகீலா ஆண்டிக்குதான்  தர வேண்டும் .... இந்த மாதிரியான இரண்டாம்தர நடனங்களுக்கு விருது தருவதை விடுத்து , நம் பாரம்பரிய நடனங்களை வெறும் பத்மஸ்ரீ பத்மவிபூசன் பட்டங்களுக்குள் அடைக்காமல் சினிமாவிலும் அந்த மாதிரியான கலைஞர்களை தேடிபிடித்து அங்கீகாரம் கொடுத்தால் அந்த கலைகள் சினிமாவிலும் உயிர்பெறுமே....


இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருது தனுஸிர்க்காம் .... அழுக்கு கைலி , அரை மொட்டை தலை , நாளுநாள் தாடி வைத்து கொண்டு மதுரை வட்டார மொழியை பேசிவிட்டால் அவர் சிறந்த நடிகரா? இந்த கெட்டப் , மதுரை தமிழ் இதை தவிர மாப்பிளை தனுசிற்க்கும் ஆடுகளம் தனுஸிர்க்கும் நடிப்பில் வேறு எந்த வித்தியாசமும் எனக்கு சத்தியமாக தெரியவில்லை .... கோபம் , சோகம் , வேகம் , பாசம் , காமெடி இப்படி நவரசங்களுக்கும் ஒரே முகபாவனை , ஒரே மாடுலேசன் .... தனுஷ் இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியிலாவது  மிக நுட்பமான அந்த காட்சிக்கு தேவையான முக பாவத்தை , மாடுலேசனை வெளிபடுத்தி இருக்கிறாரா? படத்தின் கதாநாயகி எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி சிரிப்பதை போலத்தான் தனுசும் படம் முழுவதும் ஒரே மாதிரி நடித்திருந்தார் , அந்த ஒரே மாதிரி சில காட்சிகளில் சிறப்பாக இருந்திருந்தாலும் தேசிய விருது அளவுக்கு கண்டிப்பாக வொர்த் இல்லை  ....  எனக்கு இந்த முழு படத்திலேயும் தனுஷ் காட்டிய நடிப்பு திறமையை விட  , உனக்கு அவசியம் தெரியனுமா , என் மார்பை பிடித்து கசக்குனான் போதுமா?” என்று வெடித்து அழும் ஒரே காட்சியில் அங்காடி தெரு அஞ்சலி கண்களில் காட்டும் கோபம் , ஆற்றாமை , சோகம் ஆயிரம் மடங்கு அதிகமாகவே தேசிய விருதுக்கு தகுதியானது ... அஞ்சலிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... 

பிதாமகன் விக்ரம் கண்டிப்பாக இந்த விருது பட்டியல் வெளி வந்த நாள் சுவற்றில் முட்டி முட்டி அழுதிருப்பார் .... அவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... இனிமேலாவது விருது வாங்கணும்னு உடம்ப வருத்தி கஷ்டபடாதீங்க பாஸ்,  அந்த விருது அந்த அளவுக்கு வொர்த் இல்லைனு அவணுகளே ஒத்துகிட்டாணுக , கைலியும் முண்டாபனியனும் கட்டிக்கிட்டு தூத்துக்குடி பாஷை பேசி நடிங்க , விருது கன்பர்ம்.. பாவம் நம் அறிவுஜீவி முன்னாள் இயக்குனர்களுக்கு இதுதான் சிறந்த நடிப்பாக தெரிகிறது....  


இந்த விருதில் இன்னொரு காமெடி சிறந்த திரைக்கதை விருது .. பேசாமல் இவர்கள் எந்திரனுக்கே சிறந்த திரைக்கதை விருது கொடுத்திருக்கலாம் ... அதற்க்கும் இதர்க்கும் பெரிய வித்தியாசமில்லை .... பாக்கியராஜ் அவர்களுக்கு ஏன் கடைசி வரை சிறந்த திரைகதைக்கு விருது கிடைக்கவில்லை என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது ... பாக்கியராஜ் இவர்களை மன்னிப்பாராக....


விண்ணை தாண்டி வருவாயா ஏ.ஆர்.ரகுமான் , மைனா சுகுமார் , மதராசபட்டிணம் செல்வகுமார் இந்த மூவரின் பெயரும் விருது பட்டியலுக்கு பரிசலிக்கபடவே இல்லையாம்.... என்ன கொடுமை இது?  

Sunday, December 19, 2010

2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை

ஆமா இவரு பெரிய மணிரத்தினம்  இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...

அதுக்கு  முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...

கேள்விக்கு போகலாமா?\

கேள்வி 1 :

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
    a) பரிமளா
    b) சியாமளா  
    c) விமலா  

கேள்வி 2

நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?

   a) கறுப்பு
   b) வெள்ளை
   c) செறுப்பே அணியவில்லை

மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க


2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :


2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )

  1. களவாணி இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
  2. பாஸ் என்கிற பாஸ்கரன் சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
  3. மைனா எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
  4. எந்திரன் ரஜினியின் வில்லத்தனம்
  5. ஆயிரத்தில் ஒருவன் விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்


சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும்  கடைசி ஒருமுறையும்  தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)

அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...



தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற  விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல


தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்

மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
  1. சுறா உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
  2. பையா  பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்... 
  3. தில்லாலங்கடி வடிவேலு மட்டும் இல்லைனா  இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்  
  4. மதராசபட்டினம் டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது  பயங்கர தலைவலி ...
  5. குட்டி இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
  6. மாத்தியோசி தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
  
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

  1. காதல் அணுக்கள் எந்திரன்
      ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...  

  1. இதுவரை கோவா
      யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...



விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என்  மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...


வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்

  1. அஞ்சா நெஞ்சன் விருது சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச  காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
  2. நினைத்ததை முடிப்பவன் விருது ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
  3. வெள்ளி விழா நாயகன் விருது இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
  4. நான் உண்மையிலேயே ஏழைங்கோ  விருது கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
  5. நானும் ரௌடிதான் விருது  ஜாக்குவார் தங்கம்  (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
  6. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )

கொஞ்சம் சீரியஸ் விருதுகள்

கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...

அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின்  அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...

சிறந்த இசை என்றாள்  ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான  சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...

சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான்   ....  

இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...

சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)

இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில்  உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள்  நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...

யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா

என்ன பண்ண விஜய் ...வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...  


சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி  விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...

               தீயா வேல பாக்கணும் பாஸ் ...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ  இயர் வாழ்த்துக்கள்  

Monday, December 6, 2010

நந்தலாலா- இவர்கள் நடித்திருந்தால்


இப்ப தமிழ் கூ(நா)றும்  பதிவுலகத்தில சூடான பேச்சு மிஸ்கினின் நந்தலாலாவை பற்றித்தான்... ஆனந்த விகடன் பத்திரிகையில் மிஸ்கின் ஒருமுறை இப்படி கூறி இருந்தார் .. "இந்த கதையை நான் பல ஹீரோக்களிடம் சொன்னேன் .. ஆனால் அவர்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்போல என்று சொல்லி நடிக்க பயந்தார்கள் .. அதனால்தான் நானே நடித்து விட்டேன்" .. இது வழக்கமாய் ஹீரோவா நடிக்க வர்ற எல்லா இயக்குனர்களும் சொல்லுரதுதான்னாலும் நான் இத கொஞ்சம் சீரியஸா எடுத்து ஒரு வேலை அந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டிருந்தாள் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தேன் ... அதன் விளைவுதான் இந்த பதிவு ...


முதலில் நம்ம தளபதி விஜய் அவர்கள் ...


2011 முதல் விஜய் உலகபடங்களில் நடிக்க போகிறார் என்று அவர் தந்தை திருவாய் மலர்ந்திருந்தார் அல்லவா .. அது இந்த நந்தலாலாதான்...




மிஸ்கின் : சார் படத்தோட ஆரம்பத்துல நீங்க மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறீங்க ..



எஸ்.ஏ.சி: நிறுத்து நிறுத்து .. என் பையன மென்டலா நடிக்க சொல்லுறியா?



மிஸ்கின் : சார் உங்க பையன் மென்டலா நடிக்கவே வேண்டாம் சார் .. அவர் எப்பவும் ங்ங்ங்கண்ணா போட்டு பேசுவாரே அதே மாதிரி பேச சொல்லுங்க போதும் ... அப்பறம் பாருங்க உங்க வீட்டுக்கு தேசிய விருதே தேடி வரும் ...



எஸ்.ஏ.சி:  நீ என் பையனோட மாஸ் தெரியாம பேசுற ... என் பையன மட்டும் மென்டலா காட்டுன தமிழ்நாடு மட்டும் இல்ல கேரளாவும் சேந்து எரியும் ...நீ கேரளாகாரன்தான பேசாம நான் சொல்லுற மாதிரி கதைய மாத்து , உன்ன விஜய் ஆரம்பிக்க போற வி.மு.காவோட கேரளா மாநில கொள்கை பரப்பு செயலாளரா ஆக்கி என் பையனை கும்புட்டு நிக்கிறமாதிரி என் பையனோட செலை பக்கத்துல உனக்கு ஒரு செலை வச்சிருவோம்...

விஜய்: நைனா நீ கொஞ்சம் கம்முண்ணு கெட .. ங்ங்ண்ணா... நீங்க முழு கதையையும் சொல்லுங்க்ண்ணா ...


(மிஷ்கின் முழு கதையையும் சொல்லி முடிக்கிறார்...)

விஜய்: கதை ஓ.கே.. எங்கப்பா சின்ன சின்ன சேஞ்ச் சொல்லுவாறு ... அத கொஞ்சம் திருத்திக்கிட்டீங்கன்னா .. படத்த ஆரம்பிச்சிடலாம்னா...

எஸ்.ஏ.சி : மொத இந்த படத்துல விஜய் மெண்டல் கிடையாது ... அவர் சின்ன வயசுல அவங்க ஊருள ஏழைகளை கொடுமபடுத்திர பண்ணையார போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போராறு ... ஜெயிலில இருக்கும் போது அவரு அம்மா ஞாபகம் வர , அவங்க அம்மாவ பாக்கணும்னு ஜெயில விட்டு தப்பிக்கிராறு .. அப்பதான் அந்த சின்ன பையன வழியில பாக்குராறு... அவனும் அவங்க அம்மாவ பாக்க போய்கிட்டு இருக்கான் .. விஜய் போர ஊரு திருப்பாச்சி .. பையன் போர ஊரு சிவகாசி ... ரெண்டுமே கேரளா பார்டெர்ல இருக்கு... அந்த பையன் கேரக்டெர்ல நம்ம குட்டி தளபதி சஞ்சய்தான் நடிக்கிராறு ... அவருக்கு ஓபெனிங்க் சீனே தூள் பரக்கணும் ... அவர் கால மொதல்ல காட்டி அப்படியே தமிழ்நாடு  மேப் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து அவர் காலடியில விழனும்... பின்னாடி 2030 அப்படின்னு எழுத்து போடனும் .. 2030ல அவர்தான் தமிழக முதல்வர் அப்படிங்கிரத சிம்பாலிக்கா காட்டனும் ..

மிஷ்கின் : ஸார் இது அவார்ட் படம் ..

எஸ் ஏ சி : யோவ் அவார்ட் படம் எடுத்தா வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது .. நான் சொல்ற மாதிரி படம் எடு அடுத்த விஜய் கவர்ன்மெண்ட்ல நீதான் கலை மற்றும் ஊடக துறை அமைச்சர்... உன் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கலாம்...

மிஷ்கின்: ஸார் நான் இலக்கிய புஸ்தகத்த மட்டும்தான் வாசிப்பேன் .. உங்களுக்கெல்லாம் வாசிக்க மாட்டேன் ...

கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் மிஷ்கின்...

அடுத்த வாரம்  ஆனந்த விகடனில் பேட்டி

மிஷ்கின் : தமிழ் சினிமா நடிகர்களுக்கு சுத்தமாக ரசனை இல்லை ,, ரெண்டு மூணு பிட்டு படம் பார்த்து விட்டு நடிகனாக வேண்டும் என்று சினிமாவிர்க்குல் நுழைந்து விடுகிறார்கள்... சிறந்த நடிப்பை வெளிபடுத்த திரிஷாக்களுடன் நூறு முறை அமெரிக்காவில் டேட்டிங்க் போன அனுபவம்  மட்டும் போதாது .. இயக்குனர்களை மதிக்க தெரிய வேண்டும் ...

(அடுத்து மிஷ்கின் நம்ம தல வீட்டிர்க்கு கதை சொல்ல போகிறார்) ...



மிஷ்கின் : ஸார் இந்த படத்துல நடிக்க தகுதியான ஒரே ஆளு நீங்கதான்... கமலுக்கு அப்புறம்  இந்த கேரக்டர் நீங்க மட்டும்தான் சரியா பண்ண முடியும் ...

தல : எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?

மிஷ்கின் : நீங்க கதைக்கு   சம்பந்தமே இல்லாம எல்லா படத்துளையும் நடந்துகிட்டே இருப்பீங்க ... இந்த படத்துல கதை படியே நீங்க எப்பவும் நடந்துகிட்டேதான் இருக்கணும் ... அதான் சொன்னேன் ... நீங்க நடந்தா ச்சீ நடிச்சா படத்துக்கு பொருத்தமா இருக்கும்...

தல: ஏலே  .. இனிமே நா நடக்க மாட்டேன் .. என் படம்தான் ஓடும்...

மிஷ்கின்: (ஆகா பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சிட்டாரே... ) இந்த கதையை நான் உங்ககிட்ட சொல்ல வந்ததுக்கு உங்களுக்கு பையன் இல்லாததும் இன்னொரு காரணம். .... ஏற்கனவே ஒரு குடும்பமே ஒண்ணு சேந்து என் கதையை கொல்ல  பாத்தானுக ... நீங்க தனி ஆள் தல அதான் தைரியமா வந்தேன்...

தல : ஏலே நான் தனி ஆள் இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ...

மிஷ்கின் : (நைசா பின்னாடி எட்டி பாத்து) தல உங்க பின்னாடி குப்பைகூடைதான் இருக்கு ...

தல : நீ ரொம்ப பேசுர ... கதையை என் பிஆர்ஓகிட்ட சொல்லிட்டு போ .. எனக்கு அடுத்த வாரம் தேனிக்கு பக்கத்துல அத்திபட்டில ரேக்லா ரேஸ் இருக்கு .. அத முடிச்சிட்டு உன்னை கூப்புடுறேன்...

அடுத்த வாரம் ஆனந்த விகடன்..

கேள்வி: நீங்களும் அஜித்தும் சேந்து பண்ண போற படம் என்னாச்சு?

மிஷ்கின் : நான் தலைக்கு மேல மயிரு இருக்கிறவங்ககிட்ட மட்டும்தான் வேலை செய்வேன்... மீசைக்கு கீழ மயிர் இருந்தா எனக்கு பிடிக்காது .. பாருங்க நானே அத எடுத்திட்டேன்...


இதற்க்கு அஜித்தின் பதில் என்ன என்று கேட்க எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு அவரை சந்திக்க முயல .. தல ரொம்ப கூலாக  வெங்கட் பிரபுவை வைத்து எங்காத்தா எடுக்க கிளம்பி விடுகிறார் ...  நான்கு மாதம் கழித்து மிஷ்கினுக்கு  பதில் சொல்லுகிறார்

நான் இல்லாம அவர் மூணு மொக்கை போட்டுட்டார் .. அவர் இல்லாம நான் இருபது மொக்கை போட்டுட்டேன் ...யாருக்கும் யாரும் தேவை இல்லை


பெரிய நடிகர்களை நம்பி பயன் இல்லை என்று மிஷ்கின் அடுத்து நம்ம டீ.ஆரை தேடி போகிறார்


டீ ஆர்: வாங்க மிஷ்கின் ... தலைக்கு மேல மயிர் இருக்கிறவாங்கக்கூட மட்டும்தான் வேலை செய்வேண்ணு சொல்லிட்டு இப்ப உடம்பு முலுசும் மயிர் இருக்கிற என்ன தேடி வாரீங்கா...

மிஷ்கின் : எல்லாம் நேரம்தான்... சரி நான் கதைய சொல்லி முடிக்கிறேன் அப்பறம் நாம பேசிக்கலாம் ...

(கதையை சொல்லி முடிக்கிறார்)

டீ ஆர் :  நீ சொன்ன கதை டாப்பு
            ஆனா நான் இதுல நடிச்சா மக்கள் வப்பான் ஆப்பு
            நான் சொல்லுறேன் சில சேஞ்சு
            அத நீ செய்யி துணிஞ்சு
            அப்பால  எகிறும்பாறு உன் ரேஞ்சு
            யே டண்டனக்கா யே டனக்குனக்கா

டீ ஆர் படம்னா தமிழ்நாடு  மட்டும் இல்ல ... இந்தியாவே எதிர்பார்க்கும் ... படத்துல ஹீரோவா  நான் நடிக்கிறேன் ... அந்த பையன் கேரக்டர்ல என் பையன் குறள் நடிப்பான் ...

"யாருக்கும் அடிபணியாது எங்கட்சி .. டீ ஆரோட பலமே தங்கச்சி"....  குரலரசனோட  நான் அவன் அம்மாவ தேடி போறேன் .. அவங்க அம்மாவ பாக்குற நான் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறேன் ... காரணம் அது நான் சின்ன வயசுல ரொம்ப பாசமா வளத்த என் தங்கச்சி... அந்த சீன்ல நான் போடுறேன் பாருங்க பேக்ரவுண்ட் ம்யூசிக் ஆ சிம்ஸக் சீம்ஸக் .. டுமுக்கு டுமுக்கு சிம்ஜ்க்க் சிஜக்க் ... டுப்பு டுப்பு ... (வாயிலேயே ம்யூசிக் போட்டு காட்டுகிறார் )அப்படியே ஆடியன்ஸ் கண்ணுல தண்ணி வர தியேட்டர்ல உக்காந்து இருப்பான் ... அப்பதான் ஒரு பிளாஷ் பேக் காட்டுறோம் சின்ன வயசுல முள் குத்தி அவ கால்ல வந்த  ரத்தத்த பாத்துதான் பாசத்துல அதிர்ச்சியாகி நான் மெண்டலாவே  ஆகிறேன்...
அப்படிபட தங்கச்சி ஏன் இப்படி ஆனா? அவங்க ஊரு எம்எல்ஏ பையன் அவளை ஏமாத்தி கெடுத்திரான்.. அவனுக்கும் அவளுக்கும் பொறந்த பையந்தான் குறள் ... இவங்க ரெண்டு பேரையும் அவங்க அப்பனோட சேத்து  வைக்க நான் எம்எல்ஏ வோட போராடுறேன் ... இதுதான் கதை ... படத்துல எனக்கு  ஜோடியா மும்தாஜ் நடிப்பாங்க ...

ஏற்கனவே என் பையன் சிம்புவ "லிட்டில் சூப்பர் ஸ்டார்" ஆக்கி ரஜினியோட கொட்டத்தை அடக்கியாச்சி ... இப்ப கமல்தான் என் குறி அதனால டைட்டில் போடும்  போது என் பையன் குரலரசன் பேருக்கு முன்னாடி லிட்டில் உலக நாயகன் அப்படின்னு போடனும் ... இந்த படத்த பாத்து கமல் உங்களை இவ்வளவு நாள் மதிக்காம போனது என் தப்புதான்னு என் கால்ல விழுந்து கதற கதற மன்னிப்பு கேக்கணும்... கேக்க வைப்பான் ஸார் என் பையன் ... கேக்க வப்பான் ...அவன் புலிக்கு போறந்தவன் ஸார்...

மிஷ்கின் : (மனதிர்க்குல் கரடிக்கு பிறந்தவண்ணு சொல்லு கரெக்டா இருக்கும் )அப்ப உங்க வீட்டுல எல்லாமே புலிதானா? நீங்க வெறும் டம்மி பீசா? ...

"இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்... நீங்க யாருமே வேணாம் நானே நடிக்கிறேன் ஹீரோவா..."

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் மிஷ்கின் ...


இந்த படம் வெளிவந்த பின்னர் படத்தை பற்றி கருத்து கூறுமாறு விஜயின் தந்தை எஸ்ஆசியிடம் கேட்கபட்டது ..

எஸ்ஏசி: ஸார் மிஷ்கின் இவ்வளவு பெரிய திருடனா இருக்க கூடாது ஸார்? கதைய திருடலாம் தப்பில்லை ஆனா டைட்டில் கார்ட்ல அந்த ஒரிஜினல் படத்தோட பேரையாவது போட்டு இருக்கலாம்... ஒரு கிரியேட்டரா என் மனசு ரொம்ப கஷ்டபடுது ஸார்? நானும் என் மகனும் ரொம்ப கஷ்டபட்டு சங்கவியோட டேட்ஸ் வாங்கி எடுத்த படம் ஸார் விஷ்ணு .. அந்த படத்த அப்படியே ஆட்டைய போட்டிருக்காரு ஸார் இவர்... அதுல விஜயும் சங்கவியும் காடு மலைண்ணு நடந்தே சங்கவியோட கிராமத்துக்கு பயணம் போவாங்க... அவங்க பயணத்தோட நடுவுல நெஞ்ச குத்துற மாதிரி(சங்கவி நெஞ்சை விஜய்)  எத்தன சீன் கஷ்டபட்டு யோசிச்சி எடுத்தேன் தெரியுமா ஸார்? மிஷ்கின் கொஞ்சம் கூட சொரணையே  இல்லாமல் என் கதையை கொஞ்சம் மாத்தி எடுத்து தமிழ் சினிமாவில் நெஞ்சை தைக்கிற மாதிரியான படம் அப்படின்னு பேர் எடுத்துட்டாறு... எனக்கு நன்றினு ஒரு சிலைடு கூட போடலேண்ணுதான் எனக்கு வருத்தமா இருக்கு...


இந்த பேட்டியை கேட்டு ஒரு இயக்குனர் அடுத்த நாள் சூசைட் பண்ணி கொள்கிறார்.. அவர் வேறு யாரும் இல்லை நந்தலாலாவின் ஒரிஜினல் கிகுஜிரோவின் இயக்குனர் டகேஷி கிடோனா


போனஸ் :

எனக்கு வந்த ஒரு விஜய் எஸ்எம்எஸ்

கஸ்டமர் : இந்த டீவீ என்ன விலை?

சேல்ஸ்மேன்: 2 லட்சம்

கஸ்டமர் : அப்படி என்ன இருக்கு இந்த டிவியில?

சேல்ஸ்மேன்: விஜய் படம் வந்தா அதுவா ஆஃப் ஆகிக்கிடும்..

கஸ்டமர் : அப்ப உயிர காக்கிற டிவியிண்ணு சொல்லுங்க.. 

(அப்ப தல படம் வந்தா டிவி கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிடுமாண்ணு பின்னூட்டம் போட நினைப்பவர்கள் கடையில் காவலன் படத்தில் விஜய் பேசி இருக்கும் அத்துணை பஞ்ச் டயலாக்க்குகளும் பின்னூட்டதில் போடபட்டு வைரஸ் அட்டாக் நடத்தி கடை காலி செய்யபடும்)



LinkWithin

Related Posts with Thumbnails