இது
வாத்தியார்களுக்கான படம் ... இன்று நம் தலைமுறையில் நாமெல்லாம் அமெரிக்காவில்
அமர்ந்து பொட்டி தட்டி
கொண்டிருக்கிறோம் என்றாள் , ஒரு காலத்தில் நம் பாட்டனும் பூட்டனும்
வாழ்ந்த குக்கிராமத்திற்க்கு தன் சொந்தங்களையும் , பந்தங்களையும் விட்டு விட்டு தமிழகத்தின் ஏதோ
ஒரு மூலையில் இருந்து வந்து பள்ளிக்கூடம் அமைத்து பாடம் சொல்லிக்கொடுத்த அந்த
வாத்தியும் ஒரு முக்கிய காரணம்...
எந்திரனில் உச்சம் தொட ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் எவ்வளவு உதவியதோ அந்த அளவிற்க்கு நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்கு
உதவியவர்கள் அவர்கள்...
பசி எடுக்கிற
ஒருவனுக்கு மீனை பிச்சை போடுவதை விட அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்று
ஜப்பானோ சீனாவோ ஏதோ ஒரு நாட்டு பழமொழி சொல்லுகிறதாம்... ஆண்டாண்டு காலமாய் அரசனிடமும் அடுத்து பண்ணைகளிடமும் கடைசியாய் ஆங்கிலேயனிடமும் பிச்சை எடுத்து கொண்டிருந்த
நமக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்த சூத்திரதாரிகள்
அவர்கள். அவர்களின் பணி அவ்வளவு ஒன்றும்
எளிமையானது அல்ல... சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் இந்த காலத்திலேயே நம் நாட்டில்
படித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம்தானாம்.. நிலாவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்த அந்த காலத்தில்
நம் நிலமை எப்படி இருந்திருக்கும்?... 1.76 லட்சம் கோடி ஊழல் செய்யும்
அளவுக்கு பொருளாதார வசதி
நிறைந்து கிடக்கும் இந்த
காலத்திலேயே நம் நாட்டில் 4 கோடி குழந்தை
தொழிலாளர்கள் இருக்கிறார்களாம்...
அப்படி என்றாள் நாப்பது அம்பது வருடங்களுக்கு
முன்னாள்?
ஊருக்கு ஒரு கோவில்
அமைப்போம் என்ற வாசகத்தை காமராஜர் ஊருக்கு ஒரு பாடசாலை அமைப்போம் என்று மாற்றி
அமைக்க ஆரம்பித்த 60களின் இறுதியில் நடக்கும் கதைதான் வாகைசூட
வா.. ஆனால் இந்த கதையில் நம் ஒவ்வொருவரின் வரலாறும் பூடகமாக ஒழிந்திருக்கிறது...
செங்கல் சூளையும் , அதில் இரவு பகலாக உழைக்கும் மக்களும் ,ஆண்டையின்
ஆட்கள் லாவமாக அவர்களை ஏமாற்றுவதும் அது தெரியாமல் ஆண்டைக்கு அவர்கள் விசுவாசமாக
இருப்பதும் என , தமிழனின் ஓட்டு மொத்த வரலாறும் இந்த
குறியீடுகளில் லாவகமாக பொருந்தி போகிறது...
ஒரு சமூகத்திர்க்கு நல்லது செய்ய வந்த ஒருவன் பிற்காலத்தில் அந்த சமூகத்தின் அழிவிர்க்கு மறைமுகமாக காரணமாகிறான். அப்படி ஒரு கதாபாத்திரமாக
வரும் பைத்தியம் பிடித்து அலையும் குருவிகாரன் எனக்கு காந்தியையும் , அண்ணாவையும் ஞாபகபடுத்தி சென்றான் ...அவர்களும் உயிரோடு இன்று இருந்தால் இப்படித்தான் பைத்தியம்
பிடித்து அலைந்திருப்பார்கள்... பொருளாதாரத்தை
முன்னேற்றுகிறோம் என்று காட்டையும் நாட்டையும் அழித்து நாம் கட்டி கொண்டிருக்கும்
தொழிற்சாலைகளாலும் , சுரங்கங்களாலும் ,
குருவிக்கு இடம் இல்லை என்று படத்தில்
குருவிகாரன் பேசும் வசனங்கள் மனிதனுக்கு இடம் இல்லை என்று உருமாறும் காலம்
வெகுதொலைவில் இல்லை...
இப்படி நம் வாழ்வியலை
அருமையாக திரையில் காண்பித்திருக்கும் அதே வேளையில் திரைபடங்களுக்கே உரிய
கொண்டாட்டங்களும் திரையில் விரிகிறது.. சர சர சாரகாத்து பாடல் அந்த
கொண்டாட்டங்களின் உச்சம்... தூண்டில்
இழுபடுவதை வைத்தே மாட்டி இருப்பது எந்த மீன் என்று சரியாக
சொல்லுவது , ரேடியோவை ஆஃப் செய்ய தெரியாமல்
தண்ணீரில் முக்குவது , முதன் முதலில் எழுத
கற்று கொள்ளும் ஒருவன் “அ”னாவை செங்களில் எழுதுவது , பின்னர் மழைவந்து அந்த செங்கல்
மொத்தவும் கரைந்து விடுவது ,
நான் போறேன் , நீ இருக்கையா? , விதைக்கவே இல்லை நீ அறுக்குற, என்று குருவிகாரன் பேசும் வசனங்கள் இப்படி இயக்குனர் பல
இடங்களில் அட போட வைக்கிறார்...
செங்களை எடுத்து
செல்ல வரும் லாரிக்காரன் செங்களை லாரியில் ஏற்ற உதவிய சிறுவர்களுக்கு காசை
குறைத்து கொடுத்து ஏமாற்ற,
அவர்கள் காசை சரியாக எண்ணி எங்கள் உழைப்பிற்க்கு இது போதாது இன்னும் இரண்டு ரூபாய்
கொடு என்று அவனிடம் கேட்டு வாங்குவதாய் படம் நிறைவடைகிறது... கல்வியின் அவசியத்தை
இதைவிட வேறு எப்படி சொல்லிவிட முடியும்... ஆனால் நம் சமூகம் இன்னமும் இதை
உணரவில்லை , இல்லையென்றால் படத்தின்
இறுதியில் “இது நாடு முழுவதும்
இருக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்” என்னும் வாசகம் போடும் அளவுக்கு கேவலமான நிலமை நமக்கு நேர்ந்திருக்காது...
கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக மக்களை ஏமாளியாக்கி காசு சம்பாதிக்காமல் (உதாரணம் எங்கேயும் எப்போதும்) ,
தான் சொல்லவந்த கருத்தை கொஞ்சம் கூட எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் இயல்பாக சொல்லியதார்க்காகவே சற்குணத்தை தலையில் தூக்கி வைத்து
கொண்டாடலாம்...
களவாணியில் ருசியான
கிராமத்து கறி விருந்து படைத்த சற்குணம் ,
இம்முறை படைத்திருப்பது சத்தான கேப்பை கூழ்... மார்க்கெட்டில் விலை போகாது
என்றாலும் இன்றைய நிலமையில்
நமக்கு தேவையான
பதார்த்தம்தான் இது...
