தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது , இந்தியாவுக்கு குறிப்பாக தென்னிந்தியாவுக்கு கடவுள் கொடுத்த கொடை அது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு , கேரளா கர்நாடகா , கோவா , மகாராஸ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் சுவர் இந்த மலைத்தொடர். தென்னிந்தியாவின் பல முக்கியமான சுற்றுலா மையங்கள் இந்த மலையில்தான் அமைந்துள்ளன.உலகளவில் வெகு வேகமாக அழிந்து வரும் பல உயிரினங்கள் பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் ,பல அறிய விலங்குகளின் சரணாலயங்கள் அமையபெற்றிருக்கும் இடம் , தென்னியாவின் ஒட்டு மொத்த ஜீவநதிகளும் உற்பத்தியாகும் இடம் , இதெற்கெல்லாம் மேலாக உலகளவில் வேறு எங்கும் காண கிடைக்காத பல அரியவகை மூலிகைகள் விளையும் காடுகள் அதிகம் உள்ள மலைத்தொடர் என்று இந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கு பல பெருமைகள் உண்டு... இது எல்லாம் தெரிந்ததுதானே என்று நீங்கள் கேட்கலாம் அது அல்ல மேட்டர் , இப்படி பல சிறப்பு வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலையை UNESCO உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளதாம் , இதை இந்திய அரசாங்கம் பெரிய அளவில் முயற்சி எடுத்து சாதித்துள்ளதாம் , இந்திய இயற்கை வள மேம்பாட்டு துறையினர் பெருமையாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள் , மேலோட்டமாக பார்த்தால் இது பெருமைதானே என்று நினைக்கலாம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் சதி அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை , தமிழகத்தில் மிக வறண்ட பகுதிகள் என்று எடுத்து கொண்டால் அது தென்கிழக்கு மாவட்டங்களான விருதுநகர் , மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்கள்தான் , நம் மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தென்மேற்கு மழை அஜித் பட ஒபெநிங் போல சுழற்றி அடிக்கும் காலகட்டங்களில் இங்கு விஜய் பட ஒபெநிங் போல மழை மந்தமாக இருக்கும் , பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு ஒருமுறைதான் தென்மேற்கு பருவ மழை முழுவதுமாக பெய்து இந்த மாவட்ட மக்களுக்கு கருணை காட்டும் , ஆனால் அதே காலகட்டங்களில் கேரளாவின் கடற்கரையோர பகுதிகளில் மழை வெழுத்து வாங்கும் , இப்படி இங்கே மழை பெய்யாமல் போவதற்கும் அங்கெ அபரிமிதமாக மழை பெய்வதற்கும் ஒரே காரணம் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள்தான்.
தென்மேற்கு பருவகாற்று வீசும் காலகட்டத்தில் அரபி கடலில் இருந்து உற்பத்தியாகும் மேகக்கூட்டங்கள் கிழக்கு நோக்கி அதாவது தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டங்களை நோக்கி அந்த காற்றால் இழுத்து வரப்படும் , அந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் மழையாக பொழிந்தால் இன்று ராமாநாதபுரம் மாவட்டம்தான் தமிழகத்திலேயே பசுமையான மாவட்டமாக இருந்திருக்கும் , ஆனால் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அதற்க்கு எமனாக அமைந்து விட்டது , இந்த உயரமான மலைகள் இந்த காற்றையும் மேகங்களையும் தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன , பெரும்பாலான மேகங்கள் அந்த மலைகளுக்குள்ளேயே மழையாக பொழிந்து ஆறுகளாக உருவெடுத்து மீண்டும் கேரளா வழியாக அரபி கடலுக்கே சென்று கலந்து விடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில்தான் கலக்கும் , மிக சில ஆறுகளே (தாமிரபரணி , காவேரி , வைகை ) தமிழகத்தை நோக்கி விரியும் , (ஆனால் அவற்றிலும் நடுவில் அணையை கட்டி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்கள் ). இப்படி மேகங்களும் கிடைக்காமல் அவற்றால் தண்ணீரும் கிடைக்காமல் இயற்கையும் அரசாங்கமும் நம்மை வஞ்சித்து வருகிறார்கள் , இதனால் பாசனத்துக்கும் , குடிப்பதற்கும் மிக பெரிய தண்ணீர் தட்டுபாட்டை நோக்கி நம் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது , இந்த சமயத்தில்தான் தமிழகத்துக்குள் ஒரு புதிய கோரிக்கை பலதரப்பட்ட மக்கள் இயக்கங்களாலும் , மதிமுக போன்ற ஒருசில அரசியல் கட்சிகளாலும் நம் இந்திய அரசாங்கத்தை நோக்கி வீசப்பட்டது , அது மேற்கு தொடச்சி மலைத்தொடரை சில இடங்களில் செப்பனிட்டு அதாவது உயரத்தை குறைத்தோ இல்லை கணவாய்கள் அமைத்தோ தென்மேற்கு பருவ காற்று தமிழகத்துக்குள் அதிகபடியாக நுழையும்படியான வசதியை செய்து தரவேண்டும் என்பதுதான்... அப்படி செய்தால் தமிழகத்தின் வறண்ட பகுதிகளை ஓரளவு பசுமையான பகுதிகளாக மாற்றலாம் , ஆனால் அதே சமயம் கேரளாவில் இப்பொழுது அபரிமிதமாக அதாவது தேவைக்கு அதிகமாகவே பெய்து வரும் மழை குறைந்து விடும்.
எங்கே தமிழகத்தில் இந்த கோரிக்கை வலுபெற்று விடுமோ என்ற பயந்த கேரளா அரசு , மத்திய அரசின் மூலம் செய்திருக்கும் சகுனி வேலைதான் இந்த பாரம்பரிய சின்னம் என்னும் வறட்டு கவுரவம்.. இதன் மூலம் அந்த மலையை யாரும் தொந்தரவு செய்ய முடியாமல் செய்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்திருக்கிறது கேரளா அரசு , பெருமைக்கு பெருமையும் ஆச்சு , நீர் வளத்தையும் காப்பாற்றியாகிவிட்டது , ஆனால் இதன் மூலம் மறுபடியும் கேனையர்களாக்கபட்டிருப்பது வழக்கம் போல தமிழகர்கள்தான்.. அணையை போட்டு தண்ணீரை தடுத்தவர்கள் இப்பொழுது காற்றையும் மேகத்தையும் கூட நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் சகுனி வேலையை சத்தம் இல்லாமல் செய்து விட்டார்கள் , இந்த விசயத்தின் பின்னால் இருக்கும் அரசியலை எழுதகூட இங்கே ஒரு ஊடகமும் இல்லை , மாறாக இது தமிழனக்கும் ஒரு பெருமைதான் என்று நம்மை மூளை சலவை செய்யும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது நம் அரசு சார்ந்த மற்றும் அதற்க்கு சொம்படிக்கும் சில ஊடகங்கள்.
(எங்கள் ஊர் பகுதிகளில் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னாள் இருந்த பசுமைகூட இப்பொழுது இல்லை , முன்பெல்லாம் வருடா வருடம் ஓரளவு மழை பெய்து கிணற்றில் முழுவதுமாக நீர் நிரம்பி இருக்கும் , கண்மாய்களில் நீர் நிரம்பி விவசாய பாசனத்துக்கு கைகொடுக்கும் , ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது , எங்கள் ஊர் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி பல வருடங்கள் ஆகிறது , கிணற்றில் நீச்சல் அடிப்பது என்பதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவாகவே மாறிவிட்டது , விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக மாறிவருகிறது , நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது , இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இன்னும் அம்பது வருடங்களில் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதிகள் வாழவே முடியாத பகுதிகளாக மாறினாலும் ஆச்சரியமில்லை... )




