Saturday, August 29, 2009

வாரான் வாரான் பூச்சாண்டி



ஒரு வீடு இரு திருடர்கள்
அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.


இந்த கவிதையை எழுதியது இலங்கை பிரச்ச்சனைகாய் உயிர் நீத்த முத்துகுமார்




No comments:

Post a Comment

write something about your view on this post...