Followers

Copyright

QRCode

Friday, December 14, 2012

கமல் ஒரு சிறந்த வியாபாரியா? பாகம் 1



பத்துவருடங்களுக்கு முன்பாக எல்லாம் எந்த  புது படங்களும் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆவதில்லை , சுட சுட படம் பார்க்க வேண்டும் என்றால் இருபது கிலோமீட்டர் பயணித்து நாங்கள் விருதுநகர் சென்றுதான் பார்க்க வேண்டும்.. எங்கள் சுற்று வட்டாரத்தில் விருதுநகர்தான் A சென்டர் , எங்கள் ஊர் திரையரங்குகள் எல்லாம்  B சென்டர் , எங்கள் ஊரை சுற்றி இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகள் (டெண்டு கொட்டாய்கள் ) C சென்டர் என்று சென்டர் வாரியாக அப்பொழுது சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருந்தது , A சென்டரில் முதலில் ரிலீஸ் ஆகி அங்கு பிலிம் தேய தேய ஓடி எங்கள் ஊரில் அதே படம் திரையிடப்படும் பொழுது திரை முழுவதும் கோடுகள்தான் தெரியும் ,C  சென்டர் கதி இன்னும் கேவலம் , ஒலியும் தேய்ந்து பல படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அழுது கொண்டேதான் வசனம் பேசுவார்கள் ...  அந்தே நேரத்தில் மெல்ல மெல்ல கேபிள் டிவி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்க பழைய படங்கள் என்றாலும் தெளிவாக குறிப்பாக இலவசமாக படம் பார்க்கும் வசதி கிடைத்தவுடன் B மற்றும் C சென்டர்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது , 

சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா படங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த B & C திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்டபங்களாக மாறி , இனி சினிமா மெல்ல சாகும் என்ற நிலை வந்துகொண்டிருந்த நேரத்தில் இதற்க்கு தீர்வாக உலக நாயகன்  ஒரு பக்காவனா திட்டத்தோடு களம் இறங்கினார் , மளிகை சாமான்  போல சினிமாவும் மக்கள் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும்  A, B, C என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் எல்லா ஊர்களிலும்நேரடியாக  படங்களை ரிலீஸ் செய்வோம் ,வீட்டுக்கு பக்கத்திலேயே படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தால்  மக்கள் கண்டிப்பாக திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று புது வியாபார யுக்தியை அறிமுகபடுத்த முயற்சித்தார் , ஆனால் அதற்க்கு அப்பொழுது ஏகப்பட்ட எதிர்ப்புகள் இவர் தன்னுடைய படத்தை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்கிறார் , அவர் பேச்சை நம்பி எல்லாரும் படத்தை வாங்கி வெளியிட்டால் தயாரிப்பாளராக அவருக்கு லாபம்தான் ஆனால் திரையரங்குகள் இன்னும் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தி அதற்க்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வந்தார்கள் , ஆனால் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய வேட்டிடையாடு விளையாடு படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் கூட நேரடியாக வெளியிட்டார் , ரிசல்ட்??? தனக்கு அருகில் இருக்கும் திரையரங்கிலேயே புது படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் எல்லாரும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி நகர ஆரம்பித்தனர் . அன்று யாரெல்லாம் கமலை திட்டினார்களோ அவர்கள்தான் இன்று இதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் , ஏன் கமல் கல்லடி படும் போது அவருக்கு தோள் கொடுக்காத அவர் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டாத அவரின் சக சினிமா கதாநாயகர்கள் கூட அதன் பின்னர் இதே முறையை பின்பற்றி தங்கள் படங்களின் வியாபரத்தை பெருக்கி கொண்டார்கள் , அன்று கமல் மட்டும் வித்தியாசமாக யோசிக்காமல் இருந்திருந்தால் இருபது கோடி முப்பது கோடி என்றிருந்த தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று எழுபது கோடி எம்பது கோடி என்று  இருந்திருக்காது ... 

ஆனால் கமலை அன்று எதிர்த்த திரையரங்க உரிமையாளர்கள் அதன் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்தை பார்த்தவுடன் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி குறைந்த பார்வையாளர்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தனர் , ஆனால் இன்று அதுவே படம் பார்க்கும் நமக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது , எங்கள் ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றும் இருக்கும் , ஓளி ஒலி அமைப்பிலோ , குளிர்சாதன அமைப்பிலோ , ஏன் கழிவறை கட்டமைப்பிலோ எந்த முன்னேற்றமும் இருக்காது , ஆனால் பத்து ரூபாயாக இருந்த கட்டணம் மட்டும் இன்று நூறு ரூபாயை தாண்டி இருக்கும் , இந்த கொள்ளையை பொறுக்க  முடியாமல்தான் பலரும் இப்பொழுது திரையரங்கம் பக்கம் செல்வதே இல்லை  , படம் வந்து ஒரே வாரத்தில் ஒரு காட்சிக்கு ஐந்து பேர் பத்து பேருடன் ஓடிய பெரிய நடிகர்களின் படங்கள் ஏராளம் , முன்பெல்லாம் ஒரு ஐநூறு பேர் படம் பார்த்தால் அவன் இன்னொரு ஐநூறு பேரிடம் படத்தை பற்றி சொல்லுவான் , அதில் ஒரு இருநூறு பேராவது படம் பார்க்க வருவார்கள் , கட்டணம் குறைவாக  இருந்தாலும் வசூல் அதிகமாக இருக்கும் , ஆனால் இன்று அதிக விலை கொடுத்து பார்ப்பதே ஐம்பது பேர்தான் என்பதால் மௌத் டாக்கின் வீச்சு குறைவாகவே இருக்கும் , குடும்பத்தோடு படம் பார்க்க வருபவன் எல்லாம் திரையன்குகளின் கேவலமான கட்டமைப்பினாலும் , அதிகமான விலை கொடுக்க வேண்டியதிருப்பதாலும் ஒரு திருட்டு VCD வாங்கி அந்த குவாலிட்டியொடு திருப்திபட்டு கொள்கிறான் ... இப்படி திரையரங்கம் சென்று படம் பார்க்க பிடிக்காதவர்களின் பணமெல்லாம் ஒன்று அவர்களுக்கே மிச்சமாகிறது , இல்லையென்றால் திருட்டு VCDகாரனுக்கு சென்று விடுகிறது... தயாரிப்பாளருக்கு அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை... 

இதை எப்படி சரி செய்வது என்று எல்லாரும் (சினிமா வியாபாரிகள்) யோசித்து கொண்டிருக்கும் பொது மீண்டும் ஒரு அட்டகாசமான திட்டத்தோடு வந்திருக்கிறார் நம் உலக நாயகன் ... உலகம் உருண்டை என்று முதலில் சொன்னவர்களுக்கு கிடைத்த அதே கல்லடிதான் கமலுக்கும் , இந்த கல்லடி படம் வெளிவந்த பிறகும் தொடருமா? DTH தொழில் நுட்பம் சினிமாவுக்கு வரமா? சாபமா? என்று எனக்கு தெரிந்த சில விசயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

தொடரும் ..........

Thursday, November 22, 2012

முதல் அனுபவம்




ரொம்ப நாளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலேஷ் படத்தை இன்றுதான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. தல நான்கே நன்கு நிமிடம்தான் வருவார் என்றாலும்  இந்த படத்தை  பார்த்தே ஆகவேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தேன் இன்றுதான் கைகூடியது ... படத்தில் தல தன்னுடைய தமிழை பற்றி பேசும் வசனம் ...வாவ் i just mad about you thala ... இந்த படத்தில் "முதல் முறைதான் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா அதுதான் எப்பவும் திரும்ப வாராது" என்று ஒரு வசனம் , தல பேசுவது போல வரும்... அந்த வசனத்தை கேட்ட பிறகு கொஞ்ச நேரம்  நானும் என் வாழ்க்கையை திரும்பி பார்க்க ஆரம்பித்தேன் , சந்தோசம் , சோகம் , காதல் , அவமானம் என்று எல்லாமும் முதல் முறை ஏற்படும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் வேறு எப்பொழுதும் கண்டிப்பாக கிடைக்காது ... அப்படி என்னுடைய மறக்க முடியாத முதல் முறை அனுபவங்களே இந்த பதிவு ... இது ஒரு சுயசொரிதலாக  கூட இருக்கலாம் , எனவே பிடிக்காதவர்கள் இப்படியே கிளம்பி விடவும்  ...


1. முதல் அடி 

   எனக்கு நினைவு தெரிந்து நான் வாங்கிய முதல் அடி என்னுடைய மாமாவிடம் இருந்துதான் , நான்கு வயதில் ஒரு பொம்மை கேட்டு அடம்பிடித்து வாங்கிய அடி ,  அடி வாங்கி கோபத்தில் இரவில் வீட்டை விட்டு வெளியேறி எங்கு போவது என்று தெரியாமல் எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு சுடுகாட்டுக்கு  அருகே ஆலமரத்தில் எந்த பயமும் இல்லாமல் உக்கார்ந்திருந்த என்னை பார்த்துதான் உண்மையில் என் மாமா மிரண்டு விட்டார் ...  (அந்த வயதில் சுடுகாட்டை பற்றி நமக்கு என்ன தெரியும் )

2. முதல் நண்பன் 


என்னுடைய பெரியப்பா பையன்தான் , ஆனால் என்னைவிட வயதில் சிறியவன் , மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே ஒரே பீடியை ஒன்றாக வழிக்கும்  அளவுக்கு எங்கள் நட்பு ரொம்ப ஸ்ட்ரோங் , ஆனால் அது வீட்டுக்கு தெரிந்து அடி வாங்கிய  பிறகு பீடியை பார்த்தாலே பயம்தான் வரும் , இருந்தாலும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது  எனக்கு சிகரெட் பழக்கத்தை அறிமுகபடுத்தியவனும் அவன்தான்,  சிகரெட் பழகிய ஆரம்ப நாட்களில் வீட்டுக்கு தெரியாமல் மறைந்து இருந்து அடிக்க நானும் அவனும் காடு மேடாக சுற்றியது இப்பொழுது நினைத்தாலும் ஏங்க வைக்கும் நினைவுகள் .... 

3. முதல் பிரிவு 

எனக்கு தெரிந்து நான் என்னுடைய அப்பா அம்மாவை பிரிந்து இருந்ததே இல்லை , கல்லூரியில் இருந்து வெளிநாட்டு டூர் ஒன்று சென்ற பொழுது இரண்டு வாரங்கள் பிரிந்து இருந்ததுதான்  அதிகம் , இரண்டு நாட்களுக்கு மேல் என்னால் என் வீட்டை விட்டு பிரிந்து  இருக்க முடியாது , இந்த வயதிலேயே இப்படியென்றால் என் சிறுவயதில் சொல்லவே வேண்டாம் , ஒரு முறை காலாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட  மதுரையில் இருக்கும் என்னுடைய மாமா வீட்டுக்கு செல்ல நேர்ந்தது , அப்பொழுதெல்லாம் எனக்கு மதுரை என்றால் அமேரிக்கா போல , கிராமத்துக்குள்ளே இருந்த எனக்கு அவ்வளவு பெரிய சிட்டியில் ஒரு வாரம் இருக்க போகிறோம் , அங்க கேபிள் டிவி வரும் தினமும் படம் பாக்கலாம் , ஹோடேலில் விதவிதமாக சாப்பிடலாம் என்ற பால்ய பருவத்து ஆசைகளோடு குசியாக கிளம்பினேன் , ஆனால் அதெல்லாம் அங்கெ போய் சேரும் வரைதான் , பஸ்ஸில் அதற்க்கு முன்னாள் நான் அவ்வளவு தூரம் சென்றதில்லை என்பதால் ஏதோ என்னுடைய வீட்டை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டதை போல ஒரு பயம் மனதில்  ஒட்டி கொண்டது , அங்கெ இருந்த என்னுடைய அம்மா போட்டாவை பார்த்து அழ ஆரம்பித்து விட்டேன் , அடுத்த நாளே என்னுடைய அப்பா வந்து என்னை கூப்பிட்டு சென்று விட்டார் , வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது ..

4. முதல் பள்ளி 


முதுகலை படிப்பு வரை எவ்வளவோ கல்வி நிறுவனங்களில் படித்திருந்தாலும் நான் ஆரம்ப கல்வி கற்ற புலியூரான் நாடார் நடுநிலை பள்ளிதான் என் மனதுக்கு நெருக்கமானது , காரணம்அங்கெ எனக்கு இருந்த கட்டற்ற சுதந்திரம் , என்னுடைய தாத்தா தலைமை ஆசிரியர் , அன்னுடைய ஆச்சி மற்றும் ஐயம்மா இருவருமே அங்கெ ஆசிரியர்கள் , எனக்கு மொத்தத்தில் அது ஒரு சொந்த வீடு போலத்தான் , அங்கெ எனக்கு ஒரு நண்பன் இருந்தான் , அவன் எல்லா நாளும் ஏதாவது ஒரு படம்  பார்த்து விட்டு அடுத்த நாள் எங்களுக்கு கதை சொல்லுவான் , அவன் கதை சொல்லும் விதமே தனி , ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருந்து சொல்லுவான் , ஒரு காட்சியில் எத்தனை போலீஸ்காரன் இருந்தான் , யார் யார் கையிலெல்லாம் துப்பாக்கி இருந்தது , ஹீரோயின் என்ன கலர் தாவணி கட்டியிருந்தால் என்று எல்லாவற்றையும் துல்லியமாக சொல்லுவான் , அவன் சொல்ல சொல்ல  நாமே மனதுக்குள் அந்த படத்தை ஓட்டி பார்த்து கொள்ளலாம் ... கருமேட்டு கருவாயன் படம் இன்று வரை நான் பார்த்ததில்லை , ஆனால் அந்த படத்தின் காட்சிகள் ஒன்று விடாமல் எனக்கு தெரியும் , காரணம் அவன் தீவிர விஜயகாந்த் ரசிகன் , எந்த படமும் பார்க்காத நாளில் திரும்ப திரும்ப கருமேட்டு கருவாயன்தான் .. எப்படியும் ஒரு அம்பது முறையாவது அந்த படத்தின் காட்சிகளை நான் கேட்டிருப்பேன் ... 


அவனுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நாள் வரை  இது தொடர்ந்தது . அதன் பிறகு இன்று வரை அவனை நான் பார்த்ததே இல்லை ... நான் ஐந்தாவது முடிக்கும் பொது என்னுடைய தாத்தாவுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஏதோ பிரச்சனை எழ , நான் அந்த பள்ளியில் இருந்து வெளியேறி அருப்புகோட்டையில் ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கப்பட்டேன் ... அதோடு என் பள்ளி பருவத்து பசுமையான நாட்களும் முடிவுக்கு வந்து விட்டது , அதன் பிறகு இன்று வரை நான் அந்த பள்ளிகூடத்துகுள்  சென்றதே இல்லை , ஆனால் அந்த பள்ளி தந்த இனிமையான நினைவுகள் இன்னமும் என் மனதில் ஈரம் கசியாமல் அப்படியே இருக்கிறது ..

5. முதல் காதல் 


முதல் முதாலாக ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியம் பிடித்ததை போல அலைந்த அனுபவம் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது ... அவள் எங்கள் சர்ச்க்கு வாரம் தவறாமல் வரும் பெண் , சிறுவயதில் இருந்தே அவளுடன் நன்றாக பேசியிருந்தாலும்,  சரியாக மீசை முளைக்க ஆரம்பித்த பருவத்தில் இருந்து  நான் சர்ச் செல்லும் பழக்கத்தையே விட்டு விட்டேன் , மூன்று வருடங்கள் நான் அந்த பக்கமே செல்லவில்லை , ஒரு நாள் சாயங்காலம் பள்ளியில் இருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த பொழுது யாரோ ஒரு பெண் எங்கள் வீட்டு டிவியில் படம் பார்த்து கொண்டிருந்தாள் , என் அம்மாவிடம் யார் என்று கேட்டபிறகுதான் அவள் என்றே எனக்கு தெரியவந்தது , இருந்தாலும் பேசவில்லை , எந்த பெண்ணிடமும் பேசியிருக்காத வயது , கூச்சம் அதிகம் , இருந்தாலும் ஆசைகளும் அதிகம் இருந்த வயது , சாப்பிடும் பொழுதுதான் அவள் முதல் முறையாக என்னை பார்த்து "எப்படி இருக்க" என்று கேட்டாள் .. அந்த குரலின் இனிமை என்னை ஏதேதோ செய்ய ஆரம்பித்தது ... எவ்வளவு சரக்கடித்தாலும் கிடைக்காத போதையை அப்பொழுது அனுபவித்தேன் ...  எல்லையில்லா ஆனந்தம் என்னுள் பரவ ஆரம்பித்து , ஆனால் பாவம் அப்பொழுது இருந்தே அவளுக்கு சனியன் சடை பின்ன ஆரம்பித்து விட்டான் ... அன்று முதல் எங்கள் நட்பை மீண்டும் புதுபித்து கொண்டோம் , வாரம் தவறாமல் சர்ச்க்கு செல்ல ஆரம்பித்தேன் , ஞாயிறு வந்தாலே குஷிதான் , மதியம் குறைந்தது ஒரு மணிநேரமாவது அவளுடன்  பேசாமல் இருக்க முடியாது .

ஆனால் இதெல்லாம் ஒரு வருடம்தான் நான் என் காதலை சொல்லும்வரை ... நான் செய்த பெரிய தவறு காதலை அவளிடம் நேரடியாக சொல்லாதது , அவளின் ரியாக்சனை என்னால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை , அவளும் அதற்க்கு பிறகு என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டாள் , ஆனால் நான் விடாமல் காலையும் மாலையும் அவள் கல்லூரி செல்லும் பொழுது அவளை மறைவாக நின்று பார்ப்பது , என் சித்தி பெண்ணிடம் ஏதாவது கடிதம் கொடுத்து விடுவது என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்து கொண்டே இருந்தேன் , ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த என்னிடம் பொறுக்க முடியாமல் "எத்தனை பேருடா என்னை தொந்தரவு பண்ணுவீங்க , உன்னோட அண்ணனை(பெரியப்பா பையன் என்னை விட ஆறு மாதம் மூத்தவன் ) நான் பிடிக்கவில்லைன்னு சொன்னதுக்கு உன்னை வச்சி பழிவாங்குரானா? ரெண்டு பெரும் சேர்ந்துகிட்டு என்னை ஏண்டா டார்ச்சர் பண்ணுறீங்க" என்று கோபமாக கேட்டுவிட்டாள் ...எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகுதான் நான் நின்று கொண்டிருந்த இடத்து சற்று அருகே ஒரு டீக்கடைக்குள் இருந்து அவன் வெளியே வந்தான் , அவனும் அவளை தினமும் பாலோவ் செய்திருக்கிறான் , எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவன் அப்ளிகேசன் போட்டுவிட்டானாம் , இது தெரியாமல் நானும் அவளை துரத்த அவனும் துரத்த அவளோ நாங்கள் ரெண்டு பெரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு  அவளை டார்ச்சர் செய்கிறோம் என்று நினைத்து விட்டாள் ... என் அண்ணனோ டேய் நான் அவளை ரொம்ப லவ் பண்றேண்டா அவள் இல்லாமல் என்னால கண்டிப்பா இருக்க முடியாதுடா நீ குறுக்க வந்து காரியத்தை கேடுத்துடாதடா என்று அழும் நிலைமையில் கேட்க , டேய் எனக்கும் அதே நிலமைதாண்டா என்று அவனிடம் சொல்லமுடியாமல் வந்து விட்டேன் .

அன்று  அவனை விட அவள் என்னை தவறாக எண்ணி விட்டாள் என்பதுதான் பெரிய வலியாக இருந்தது , அன்று இரவு முழுவதும் யோசித்து பார்த்ததில் இது வேண்டாம் விட்டுடு என்று உள்மனது சொல்லியது , அவள் என்னிடம் பேசாவிட்டாலும் அவளை தினமும் இரண்டு முறை பார்ப்பது , அவளை பற்றி என் நண்பர்களிடம் பேசுவது , அவளை நினைத்து நோட்டு புஸ்தகங்களில் கவிதை எழுதுவது என்று சந்தோசமாக போய்கொண்டிருந்தது வாழ்க்கை , ஆனால் அதற்கும் அன்றிலிருந்து ஆப்பு , ஆறு மாத காலம் பிடித்தது நான் அதில் இருந்து முழுமையாக வெளியே வர , அவள் இரண்டு  வருடங்களுக்கு பிறகு அவளுடன்  ஒன்றாக படித்த ஒரு ஹிந்து பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்...  இப்பொழுதும் சர்ச்சில் எப்பொழுதாவது அவளை பார்க்க நேரிடும் , இன்னமும் அந்த படபடப்பு அவளை பார்க்கும் போதெல்லாம் வந்துகொண்டுதான் இருக்கிறது , அவளை இன்னமும் கள்ள பார்வையால் ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்...  அவ்வபொழுது நான் என் அண்ணனுடன் சேர்ந்து உன்னை தொல்லை கொடுக்கவரவில்லை , உண்மையிலேயே உன்னை காதலித்தேன் என்று சொல்ல நினைப்பேன் ஆனால் இதுவரை சொல்லவில்லை , என்  டீன் ஏஜ் பருவத்தை வசந்தமாக்கிய தேவதை அவள்... அவள் பேரிலேயே சுகம் இருப்பதாலோ என்னவோ இன்னமும் அவள் நினைவுகள் சுகமாகவே இருக்கின்றன...

(முதல் போதை , முதல் முத்தம் , முதல் தல படம் , முதல் சம்பளம் இன்னும் சில முதல்கள் அடுத்த பதிவில்)


LinkWithin

Related Posts with Thumbnails